செவ்வாய், 16 செப்டம்பர், 2025

அவள் - அஜிதன் (சிறுகதை)

 எழுந்த நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. மனித அகத்தின் குரூரம் கொதித்து வழிய, இரக்கம் இருந்த இடம் காணாமல் போனது இங்கே.

அவளுக்குள் எழுந்த குரூரம், அவள் தாயை கொன்றழிக்க, அவள் ஆயிரம் முறை இறக்கிறாள். அவனுக்குள் இருந்த குரூரம் அவளை கொன்றழிக்க, அவள் நூறாயிரம் முறை இறக்கிறாள், இறக்கிறாள்,..இறக்கிறாள். 


அவள் பிறந்து, வளரும் வரை கூட அவன் விட்டு வைப்பது இல்லையே.. ஆதலால் இறக்கிறாள்..இறக்கிறாள்.


குரூரங்களின் மொத்த உருவமாய் அவன் யுகந்தோறும் நிற்கிறான். அவன் அக்குரூரங்கள் வழி சொரியும் குறுகுறுப்பின் சுழலில் சிக்கியவளாய் யுகம்யுகமாய் அவளும் தோன்றி கிடக்கிறாள். சாட்சியாகிறாள்! சாட்சி ஆகிறாளா? 


உன் அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டிருந்தவள் உன்னை அழைத்தாள். உன்னைப்போல் பல பன்றிகள் குரூரத்தில் புரண்டெழுந்த அவள் மனம் உனக்காய் அன்னை என்று கனிந்திருந்தது. உன்னைப்போல் பல குரூரங்களின் நிழல்களை சுமந்து சென்றிருந்தவளின், வான் தூமை பக்கத்தை நீ காணவில்லை. அது நன்பகலில் நட்சத்திரங்களாய் மின்னின. உன் உஷ்ணத்தின் வெப்பம் அதை மறைத்துவிட்டது. உன் உஷ்ணம் தாங்க தாக்க, அது கறுத்து நிழலாக தொடங்கியது. 


நட்சத்திரமாகவே அவள் நகர்ந்து சென்றிருக்கலாம். ஆனால் யுகயுகமாய் அது அப்படியில்லையே.


அன்றொரு நாள் மழைப்பொழுதில், தன்னில் நெகிழ்ந்திருந்த வேளையில், அதே பேருந்து நிறுத்தத்தில் கங்கை கலங்கம்பெற்றாள்.


பின்பு, அவளே லலிதையாக பிறப்பெடுத்தபோது, உன் அதே குரூரங்கள் ‘அரங்கேற்ற’ப்பட்டு அவள் பேதலித்தாள். 


உன் குரூரங்களை தாங்கும் அன்னையாய் அவள் பிறப்பெடுத்து கொண்டேயிருக்கிறாளே! அது அவ்வாறுதானா? அன்னைதானா? இல்லை அன்னையென்று வேடமிட்டு நிற்கும் குறுகுறுப்புகளின் நிழலுருவா? 


ஆனால் என்னால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். தன் அகம் கொந்தளிக்க பேரன்னை காத்து நிற்கிறாள். உன் ஒவ்வொரு குரூரமும் வழிந்து நுரைத்து கலந்து காணாமல் போகக்கூடிய அவளது ஆழம் அமைதியாய் குமுறி கொண்டேயிருக்கிறது. யுகம் யுகமாய் நீ கொள்ளும் கீழ்மைகளை செரித்து உன்னை தூய்மையாக்குபவள். தன்னிலை பெயராதவள்.


செல்! அவளிடம் செல்! உன் குரூரங்கள் அழியப்பெற்று அழியா வரம் பெற அவள் கருவிற்குள் செல். அங்கு தெரியும் உன் அகத்தின் அடி ஆழத்தில் அமிழ்ந்து அழிந்து கொண்டிருக்கும் உன் ஒளியின் கீற்று. அதன் நுனி பற்றி நீ எழுந்து வந்து மீண்டும் ஒரு நர்த்தனம் புரிவாயாக! இம்முறை அது உனக்கு மட்டும் என்றாகாத ஆனந்தம். அனர்த்தமில்லா ஆனந்தம்! இந்த அண்டத்திற்கான ஆனந்தம். ஆனந்த நர்த்தனம்! அவ்வாறே ஆகுக!




ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே (மொ.பெ. திருலோக சீதாராம்)

எனக்கு எப்போதும் உள்ள ஒரு கேள்வி.நான் ஏன் துன்பப்படுகிறேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இதோ இவ்வரியை எழுதும்போதும் கூட என்னுள் அக்கேள்வி நீர்க்குமிழி போல் கொப்பளிக்க காண்கிறேன். 

உண்மையில் எனக்கு மட்டும்தான் துன்பம் நிகழ்கிறதா? அல்லது என் அகவுலகை மட்டுமே என்னால் காணக் கூடுவதால் ஏற்படும் மாயையா? சரி, அந்த துன்பங்களுக்கு பின் நான் வாழ்வில் ஒரு கணம் கூட மகிழவில்லையா என்ன? மகிழ்ந்திருக்கிறேன், நிறைந்திருக்கிறேன்.இருந்தும் நடந்தேறிய நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகள் பறித்த உறவுகளும், அந்த உறவுகள் கொடுக்கும் உணர்வுகளும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. 


எண்ணிப்பார்த்தால், அவர்களுடனான ‘எனது’ தருணங்களுக்கும், ‘நான்’ அவர்களுடன் இருக்கும்போது அடைந்த இன்பங்களுக்கும், அந்த உறவுகள் ‘எனக்குத்’ தந்த ஆசுவாசத்திற்கும் 

பழகியிருக்கிறது மனம். ‘நான்’, ‘ நான்’, ‘நான்’ என்று மட்டுமே எண்ணக்கூடிய மனம். அந்த ‘நான்’ யார்? இந்த பிறவி எதற்காக? நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் இங்கே? தினம் தினம் எழும்பவும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அன்றாடத்தில் உழலவும், உண்ணவும் , உறங்கவுமா என் வாழ்க்கை? எனக்கு அது மாபெரும் சலிப்பை தருகிறது. நான் எதற்காக இங்கே இருக்கிறேன், எனக்கு என்ன தேவை? தேவையா? தேடலா? தேடல் என்ன? என்று யோசிக்கும் என்னை போன்ற ஒருவனை வரலாற்றில் இருந்து எடுத்து அருகமர்த்தி அவன் செய்த பயணம் எப்படியிருந்திருக்கும் என்று எழுதி பார்த்திருக்கிறார் ஆசிரியர். அவன் பெயர் சித்தார்த்தன்.


பிறர் வழியாய் கிடைப்பது அறிவு. உன்னிலிருந்து எழுவது ஞானம் என்பதை உணர்த்துவதற்காய், சித்தார்த்தனுடன் கோவிந்தனும் நண்பனாய் பயணப்படுகிறான். இருவரும் ஒரு தேடலை நோக்கி கிளம்பினாலும், தேடலுக்கான வழிகள் இருவருக்கும் வெவ்வேறு. அந்த வேற்றுமை வெளிப்பட்ட கணத்தில், இருவரும் இரு வேறு வழியில் பயணப்படுகிறார்கள். வாழ்வின் பாதையில் இருமுறை இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், இருமுறையும் சித்தார்த்தனே கோவிந்தனை அடையாளம் காண்கிறான். காரணம், சித்தார்த்தன் தன்னகத்தில் நிகழ்வதிலும், புறத்தில் நிகழ்வதிலும், தானும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறான். கோவிந்தன், தன் மார்க்கம் கற்பித்த முறைகளை பின்பற்றுபவனாய் மட்டுமே, ஒருவிதமான செயல்பாடு என்றளவிலேயே சிறுத்து அடைந்து கொள்கிறான்.புறத்தோடு அகத்தை பொருத்தியிருக்கவில்லை. ஆதலால் ஏதும் புலப்படவில்லை.


சித்தார்த்தனுக்கு தன் இலக்கை விரைவாய் அடைய வேண்டும் என்று எந்தவித பதற்றமும் இல்லை. ஓடும் நதிப்போல, வாழ்க்கை கடத்திக் கொண்டு போகும் வழியில் அவன் சென்று கொண்டிருக்கிறான். அந்த பயணத்தில் அலைக்கழிக்கப்படுகிறான். இடைவிடா ஒரு குரல் அவனுளிருந்து எழுந்து உந்தியது, ஒரு தருணத்தில் உறங்கி சோம்பியிருந்ததும் நடந்ததுதான். ஆனால், அது நடக்கும் முன்னம் அவன் உள்ளொளியின் தீண்டல், அவனவளில் சேர்ந்திட, அவனால் அவளில் முளைத்த தேடலும், அவன்பால் அவளுறைந்த துகள்களும், அவனுக்கு மீண்டும் அவ்வொளியை தூண்ட, அவன் தன் தேடலின் வழி நோக்கி மீண்டும் பயணப்படுகிறான். எங்கும், எதிலும் அவன் இப்படியிருந்துவிட்டோமே என்று நினைத்து துன்பப்படவில்லை. வாழ்க்கையை எதிர்கொள்கிறான்.


அவன் துன்பம் என்று உணர ஆரம்பித்த தருணமும் வருகிறது. தாளா துயர் கொள்கிறான். அதை மாற்றிவிட ஏதேதோ முயல்கிறான். அச்சமயம், அதற்கொத்த துன்பத்தை, வாழ்வில் அடைந்து மீண்ட ஒருவனால், அவன் மீண்டும் உந்தப்படுகிறான். தன் தேடலை நோக்கி குவிக்கப்படுகிறான். தன் ஞானத்தை அடைகிறான். பிறவியின் ஞானத்தை. இந்த ஞாலத்தின் ஞானத்தை. நதியின் ஓட்டத்தில், அதன் ஒலியில், அந்த ஒலி குவித்த சிந்தையில், அந்த சிந்தையின் ஒருமையில். இங்கு எல்லாம் ‘ஒன்றே’ என்ற மெஞ்ஞானத்தை அடைகிறான். புடவியின் மாபெரும் ஒத்திசைவு அவனுக்கு புலப்படுகிறது. அண்டத்தில் தன் அணுவையும், அணுவில் இவ்வண்டத்தையும் காண்கிறான். நித்திய மறுவாழ்வு.


ஒரு பள்ளத்தில் இருந்து மேடேறும்போது, வானத்து வளைவின் ஒரு புறமிருந்து மறுபுறம் செல்லும் அந்த விமானத்தின் பயணம் அது. அவன் மேடேறும் கணம் அதை தரிசிக்கிறான். அதை தரிசித்த கணம் மேடேறுகிறான்.


ஒரு கேள்வி. அவன் அடைந்ததுதான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தான்? எப்படி நம்பினான்?- அது அப்படித்தான். அது அவன் அடைந்த ஞானம். அது எதுவென்று காண நான் என் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 


ஒரு வேளை அதை உணராமலும் போகலாம். தடுமாறலாம். தாழ்வுற்று அரற்றலாம், கோவிந்தனை போல். ஆனால், அத்தருணத்தில் அதை நான் அடைய ஒரு புற உந்துதல் கிடைத்தால், பருப்பொருளென பிரம்மம் வந்து அதை எனக்கு உணர்த்தினால், இங்கு சித்தார்த்தனுக்கு கிடைத்த வாசுதேவன் போல், கோவிந்தனுக்கு கிடைத்த சித்தார்த்தன் போல், எனக்கு கிடைக்கப் பெற்றால் அது என் நல்லூழ் எனவே கொள்வேன். 



செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பஞ்சு திரி

 அப்பா வாங்கி தந்த பஞ்சு திரியில்

அப்பாவிற்கே அவள் விளக்கேற்றினாள்;

ஒளியின் நுனி தொட்டாள்;

“அம்மா, கதவ மூடிக்கோ நானும் அப்பாவும் கடைக்கு போயிட்டு வரோம்!” - என்று கிளம்பினாள்.

“சீக்கிரம் வந்திடுங்க பாப்பா கதவு திறந்தே இருக்கட்டும்”, என்றாள் அம்மா.

விளக்கின் ஒளி இன்னும் பிரகாசித்தது.

திங்கள், 19 மே, 2025

சிலிர்ப்பு - தி. ஜானகிராமன்

 May 16, 2020

1

இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது தோழி கூற எனக்கு தெரிய வந்தது, திரு.ராஜா (பட்டிமன்ற பேச்சாளர்) அவர்களது Youtube channel மற்றும் அதில், திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் புகழ்பெற்ற சிறுகதைகளை வாசிக்கும் பேருதவியை செய்து வருவது.புத்தகங்கள் வாசிப்பதின்பால் புதிதாய் பிறந்த காதலினால்,இந்த channel-ஐ subscribe செய்தேன். கதைகள் கேட்க தொடங்கினேன்.
நேற்று மாலை வரை இரு கதைகள் கேட்டு முடித்த நான், பின்னிரவில் (May 16,2020 | 1:00 AM) தொட்டது ‘சிலிர்ப்பு’ - திரு.தி.ஜானகிராமன் 1953-ல் எழுதிய கதை. ஏறத்தாழ 70 வயது நிரம்ப காத்திருக்கிறது. இந்த வயதிலும், படித்தவர் (படிக்க கேட்டவர்) மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அது எடுத்தப் பிறவிக்கு பயன் சேர்த்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
திருமதி. பாரதி பாஸ்கர் இக்கதையை 10 முறைக்கு மேல் படித்திருக்கிறாராம். இன்று அவர் படித்துமுடித்தப் போதும், முதன்முறை கேட்ட என் விழிகள் போல் அவர் குரல்-விழி கலங்கியிருந்தன.
கதையின் நாயகன் தன் 6 வயது பிள்ளையுடன் பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு செல்லும் ரயில் பயணத்தில், திருச்சி சந்திப்பில் (Junction), 10 வயது பெண்ணை சந்திக்கிறார். அவளது வாழ்க்கை,வறுமையின் காரணமாய் மேற்கொள்ளப்போகும் நீண்டப் பயணத்தை பற்றி அறியவரும் வேளையில், தனக்குள் நேர்ந்த வலியையும்,தன் பிள்ளை முடிவில் செய்த செய்கையால் சிலிர்த்த நொடிகளையும் பதிவு செய்திருப்பார்.
அந்த பெண் பெயர் காமாட்சி. அவளை வர்ணித்தபோதும்,அவள் குடும்ப சூழல் பற்றி விவரித்த போதும்,என் மனதில், 20 வருடங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டில் வேலை செய்த செல்வி அக்கா மற்றும் அவரது 5 பெண் பிள்ளைகள்தான் நினைவுக்கு வந்தார்கள்.

2
செல்வி அக்காவின் இரண்டாம் பிள்ளை - பெயர்,மாரியம்மாள். கிட்டத்தட்ட இக்கதையில் வரும் காமாட்சியை போன்றே அவளது உருவம். செல்வி அக்காவிற்கு வருடத்திற்கு ஒரு பிள்ளை பெறுவது வாடிக்கையாயிருந்தது. கேலி பேசவில்லை.அவர்களது சூழல் அப்படி. புருசன்,ரிக்‌ஷாக்காரன்.

பகலில் பாவங்கள் சுமக்கும் மனிதர்களை சுமப்பவன்,இரவின் சுமையை, கட்டியவள் வயிற்றில் கூட்டுகிறான்-வறுமையின் பிடியிலிருப்பவர்களின் ஒரே Anti-Depressant.விளைவு காமாட்சியை போன்ற வாழ்க்கையை ஏற்கும் நிலையில், பெற்ற பிள்ளைகள்.
செல்வி அக்கா வராத நாட்களில்,வீட்டு வேலைகளை செய்ய எங்கள் வீட்டிற்கு வருவாள் மாரி.சில சமயங்களில் அவளது அக்காவும் வருவதுண்டு. அப்போது எனக்கு 12 வயதிருக்கும். மாரிக்கு ஏறத்தாழ 8 அல்லது 9 வயதிருந்திருக்கக்கூடும். நான் கட்டிலில் படுத்திருக்க, அல்லது Sofa-வில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, அவள் வீட்டை கூட்டி சுத்தம் செய்ததை இப்போது நினைக்கையில்,என் மேல் எனக்கே கோபம் வருகிறது, அருவருப்பாயிருக்கிறது. ஆனால் நான் அந்த வயதிலேயே செல்வி அக்காவிடம் சொன்னதுண்டு - அக்கா பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள்,அது தப்பு என்று. என் அப்பாவிடமும் சொன்னதுண்டு,வேலையை விட்டு நிறுத்துங்கள் என்று. கருத்துக்கள் மிக தாமதமாய் சபையேறியது.
அப்போது நினைத்ததுமுண்டு அந்த பிள்ளைகளுக்கும் நம்மை போன்ற ஆசைகள் எல்லாம் இருக்கமல்லவா என்று. சில நாட்களில் நானும் மாரியும்,அவளின் அக்கா ஈஸ்வரியும் சேர்ந்துக்கொண்டு படங்கள் பார்த்ததுண்டு. காதல், காமெடி வசனங்களுக்கு அவர்கள் சிரித்ததை பார்த்து நான் மகிழ்ந்ததுமுண்டு.
ஆதலால் நான் சமத்துவம் பழகியவள் என்றெல்லாம் பொய் கூறமாட்டேன். முதலாளித்துவ பாதிப்பு எனக்குமிருந்ததால்தான் மேற்கூறிய அருவருப்பு உணர்வுக்கு தள்ளப்பட்டேன்.அந்த குற்ற உணர்வினால்தான், இந்த கதையை படித்தபின் என்னால் கடந்துபோக இயலவில்லை என்றே தோன்றுகிறது.
கதையில் (உண்மையில் ஆசிரியர் பெற்ற அனுபவமே கதையாயிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்) ஒரு கட்டத்தில்,நாயகன் இரு பிள்ளைகளையும் ரயில்வே ஸ்டேஷன் ஹோட்டலில் சாப்பிட வைத்துக்கொண்டிருப்பார். அப்போது அவர் ஒரு வரி கூறியிருப்பார். “இரண்டு அனாதைகள் உண்ணுகின்றனர்”என்று. ஆம்,அவரை பொருத்தமட்டில் தாயை விட்டு பிரிந்திருந்த தன் பிள்ளையும் அவருக்கு அனாதையாய் தெரிந்திருக்கிறான்.
மேலும் அடுத்த வரியாய் அவர் வடித்திருந்ததே என் கண்கள் வடித்ததற்கு காரணம்.
“ஒரு அனாதை தன் தாய் இருக்கும் திசை நோக்கி பயணிக்கிறது, ஒரு அனாதை தன் தாய் விட்டு எதிர்திசையில் பயணிக்கிறது” என்ற அர்த்தத்தில் அவ்வரிகள்.காமட்சியின் இடத்தில் ஒரு நிமிடம் என்னை வைத்து பார்த்தேன், என் இதயம் கனத்தது.
ஆனால் காமாட்சியோ, உண்ணும் வேளையில், அந்த வேகாத ரயில்வே ஹோட்டல் (1953-லும் அதே நிலைமைதான் போலும்) சோற்றை தன் கைகளால் பிசைந்து அந்த 6 வயது சிறுவனுக்கு ஊற்றி,வாய் துடைச்சுவிட்டு ஒரு தாய் ஸ்தானத்தை அடைகிறாள். பின்பு கைப்பிடித்து ரயிலேறி அமர்ந்தவளாய், எதார்த்தமாய் தனக்கு அமைந்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டவளாய் காட்சியில் விரிகிறாள். அந்த சிறுவன் ஊட்டிக்கொண்ட பாசத்தில், பதபதக்கிறான், அவளது நெடுந்தூர பயணத்தை புரிந்துக்கொண்டு.
கல்கத்தாவிற்கு பிள்ளை பார்த்துக்கொள்ள சென்றவள்,கண்டிப்பாக தனக்கான உறவுகளுடன் தன் வாழ்வின் பிற்பகுதியை நிம்மதியாய் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
“உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல..” (திரு.பழனிபாரதி வரிகள்)

பின்குறிப்பு:
சிலிர்ப்பு சிறுகதை பற்றிய எனது அனுபவ பதிவை படித்த எனது வாசக நண்பர் ஒருவரின் இதயம், காமாட்சியை நினைத்து கனத்த என் இதயம்போல் கனத்திருக்கிறது, மாரியம்மாளை நினைத்து.
என்னிடம் அவர் கேட்ட கேள்வி, ‘காமாட்சியை நினைத்து கனத்த உம் இதயத்திற்கு, மாரியை பற்றிய நினைவில்லையா? மாரி தற்போது எப்படி இருக்கிறார்?’ என்பது.
அவருக்கு பதிலுரைத்தேன்- மாரி மற்றும் பதிவில் குறிப்பிட்டிருந்த ஈஸ்வரி இருவரும், திருமணமாகி வெளியூரில் இருப்பதாகவும், செல்வி அக்கா, ஶ்ரீரங்கத்தில் பூ கட்டி விற்று தன் மகன் மற்றும் இரு இளைய மகள்களுடன் வசிப்பதாகவும்,ரிக்‌ஷாகார கணவனின் வாழ்க்கை சவாரி முடிந்துவிட்டதாகவும்.
அவரின் கேள்வியில் மனதிற்கு நிறைவு இருந்தது. கடைசியாய் நான் மேற்கோளிட்டிருந்த பழனிபாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டேன்.




சனி, 17 மே, 2025

எல்லையற்ற நடனம் - விவேக் சுப்ரமணியன்

ஒரு கதையில் முதல் வரியிலேயே வாசகனின் புருவமுயர்த்த முடியும் என்பதை இதுவரை நான் வாசித்ததிலேயே இதில்தான் முதன்முறையாக உணர்ந்தேன். முதல் பத்தியில் விரும்பியே அதன் ஆழத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். அதன்பின் எனக்கு தெரிந்தவையெல்லாம் ஒளிகளின் நடனம்தான். இதனை அறிவியல் பூர்வமாய் முழுதுணர அவ்வறிவியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், ஒரு கற்பனைவாதியாய் என்னால் இதில் திளைக்க முடிந்தது. அறிவியல் கதைக்கு ஜெ கூறும் அடிப்படைகளில் இது ஒன்று என்பது சமீபத்தில் தெரிந்துக் கொண்டேன்.


இணை பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தாங்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று நினைக்கையில், தங்களின் வரையறை (limitations) தெரிய வருகிறது. இது எதிர்காலத்தில் நடப்பதாய் எடுத்து கொள்ள வேண்டுமா, அல்லது சமகாலத்தில் வேறு கோள்களா, அல்லது ஒளியின் பயண வேகம் பொருத்து, எந்த பிரபஞ்சத்தின், எந்த பகுதியில், எந்த தொலைவில் இது நடக்கிறது, அது நமக்கு நிகழ்ந்த காலமாய் எடுத்து கொள்ள வேண்டுமா என்று எனக்கு தோன்றியது.


ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த தத்துவம் பொதிந்த அர்த்தங்களோடு வெளிப்பட்டன. எனக்கு இவ்வொரு கதையில் மேலை தத்துவவாதிகளின் கோட்பாடுகளுக்கிடையில் ஒரு கோடிழுத்துவிட்டதாய் தோன்றியது. Schelling naturphilosophie முதல் Schopenhauer மற்றும் ஹெடக்க்கரின் கோட்பாடுகள் எனக்குத் தோன்றின. கான்ட் பற்றி கதையில் வந்துவிடுகிறது.


இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம், நாம் படைப்பாளி. ஆனால் நாம் படைத்த ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளையும், நியதிகளையும் கொண்டுள்ளது. அவற்றை மீறி நான் தலையிட முடியாது.


“படைப்பாளியாக இருப்பது என்பது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும் கூட. நாம்  படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.”


“அவற்றின் கண்களில் கோடி ஆண்டுகளின் ஞானமும், எல்லையற்ற கருணையும் பிரகாசித்தன”.


எனக்கு பிடித்த விஷயம், கதைக்குள் மனித உணர்வுகளால் சிடுக்கு ஏற்படுத்தி, அதற்கான விடுதலையை ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் தேடி தந்தது. 


நாம் தனித்தனி தீவுகள் அல்ல. நாம் ஒரே பெருங்கடலின் அலைகள். ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையை உருவாக்குகிறது, முடிவில்லா நடனத்தில்.


ஆயிஷா வாசகனின் குரலாய் வருகிறாள். வாசகன் தவறவிடாத வண்ணம் அவளே எடுத்தும் சொல்லிவிட்டாள்.


நமது ஆராய்ச்சி இப்போது வெறும் அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது ஒரு தத்துவ பயணம், ஒரு நெறிமுறை கற்றல், ஒரு ஆன்மீக அனுபவம்.”


இவ்வருடத்தில் நான் வாசித்து திகைத்த, திளைத்த மிகச் சிறந்த கதை. கோதுமை மணி ஒரு தளத்தில் மனதிற்கு நெருக்கம் என்றால், இது வேறொரு தளத்தில் இன்னும் நெருக்கமாய். இந்த கதையை நான் மீள்வாசிப்பு செய்து கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது.  

15 - ஶ்ரீனி சங்கரன்

இலக்கியத்தில், உருவாக்கும் படைப்பு என்பது வாசகனின் சிந்தனைக்கான ஒரு திறப்பாய், வாயிலாய் அமைய வேண்டும். அதன் தொடர்பான சாத்தியங்களை, வரலாறுகளை, நிகழ்வுகளை, தத்துவங்களை தேடி அவன் செல்ல வேண்டும்.

இக்கதையை வாசித்தபின், என் சிந்தனைகளை தொகுக்க முற்பட்டபோது, அது மூன்று வகையாக பிரிந்திருப்பதை உணர்ந்தேன்.

ஒன்று, கருப்பொருளின் சாத்தியம் மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகள், தரவுகள் நோக்கிய என் பயணம்.

இரண்டு, கதைக்கொடுத்த மனித உணர்வுகள், கேள்விகள்

மூன்று, அந்த கேள்விகளின் வழியிலான ஒரு தத்துவ பயணம்


முதலாவதாக நான் சொன்னது, பொதுவாக யார் சென்று தேடினாலும் கிடைக்க கூடியவையே. அது இங்கு அவசியமல்ல.

இரண்டாவதான - மனித உணர்வுகளும், கேள்விகளும்


கதையில் ரேவன் என்ற மூத்த ஆராய்ச்சியாளர், தனது இளவலான ஆராய்ச்சியாளர் நிதன் உலகிற்கு தந்த தீர்வு, எதிர்காலத்தில் அல்லது நிகழ்காலத்தின் அதன் செயல்பாடு குறித்த தனது அனுமானங்களை,அல்லது தனக்கு உண்மையென்று தோன்றுபவையெ, ஒரு நிருபரின் வழியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த நிருபர், வாசகனுக்கான உருவகம். கதை போக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எவ்வித உணர்வுகளுக்கு ஆளாகிறோமோ அவையெல்லாம் அவன் வெளிக்காட்டுகிறான். அல்லது, அவன் வழியே அவ்வுணர்வுகளை நம் மூளையில் முடுக்கி விடுகிறார் என்று சொல்லலாம்.


கதையின் முடிவில், 


ரேவன் சொல்வது முற்றிலும் நம்பக்கூடியதா அல்லது அவரின் காழ்ப்புணரச்சியினால் சொல்லக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது.


அதே சமயத்தில், சுருதி, அனுமானத்திற்கு பின் பிரத்யட்சம் இருக்கத்தானே செய்யும், அப்போது அவர் சொல்வதை நம்பாமல் இருக்க இயலவில்லை என்றும் தோன்றுகிறது.

வேர்முள்- மாலினி ராஜ்

 வேர்முள் - வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் ஆழமாகச் சிக்கியிருக்கும் பிணைப்பு – அது நினைவாக இருக்கலாம், உறவாக இருக்கலாம், அல்லது வலியாக இருக்கலாம்.

இவை மூன்றிலும் பிணைக்கப்பட்டவளாய் அனுபமா!


தன் பருவக் காலந்தொட்டே தன்னுணர்வுகளையும் விட, தன் தாயின் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுண்டு வளர்ந்த ஒரு பெண். தனது ஆசைகளையும், தேவைகளையும் தாண்டி, தன் தாயை முன்னிருத்துபவளாய் இருந்திருக்கிறாள். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த கட்டுப்பாடு தளர்ந்ததா என்றால் இல்லை. திருமணம் ஆன பின்பும் கூட, தன் மகளை தன்னுணர்வுக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்க நினைப்பவளாய் கலையரசி, அனுபமாவின் தாய்.


போலி கெளரவத்தில் உழன்று திரிபவள். எழுத்தாளர் ஒரு வரியில் அவள் குணத்தை உடைத்துவிடுகிறார். திருமணம் முடிந்து வந்து தன்னறையில் நுழைகையில், தன் நாத்தனாரின் ஒரு பொருளை அப்புறப்படுத்தும் விதம் அவளை அப்பட்டமாய் காட்டிவிடுகிறது.  பொதுவாக, அப்பா கெளரவ வசனங்கள் பேச கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம், அது பெரிதாய் பாதிக்காது. ஆனால் அம்மா அவ்வாறு செய்கையில் அதன் வீச்சம் அதிகம்.


அவ்வாறான தன் தாயின் பேச்சு, அந்த பேச்சு தந்த வலி, அனுபமாவை , தன் மேலேயே கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது. 

அந்த கழிவிரக்கம், அவளை நினைவுகளுக்குள் இழுக்கிறது. அந்த நினைவுகளும் வலி தருகின்றன. 


அந்த வலி நினைவில் தோன்றியதும், தான் விரும்பிய உறவு மனதில் அலைமோதுகிறது. உண்மையில் அந்த உறவை அமைத்து கொள்ள விரும்பினாளா? அல்லது அவளது ஆழம் அவள் தாயுடன் பிணைக்கப்பட்டிருந்ததா?என்ற கேள்வி என்னுள்.


தன் தாயின் முடிவுகளுக்கு எல்லாம்  ஒத்துக்கொண்டது, தனது இயலாமையினால்தான் என்று ஒப்புக் கொள்கிறாள். ஆனால் எனக்கோ , அவள் தனக்கு வேண்டும் என நினைத்தது, உண்மையில் தன் அடி ஆழத்தில் அவ்வாறு நினைக்கவில்லை போலும் என்றும் தோன்றியது.


அவ்வுறவின் நினைவலை மோதினாலும் , அதனை இயல்பாக கடந்து செல்கிறாள்.அதில் ஆசுவாசமும் பெறுகிறாள். எந்த சலனமும் இல்லை.


சென்ற வாரம், ஜெ தளத்தில் ஒரு கட்டுரை. இக்கதையோடு ஒப்புநோக்க முடிபவை. கட்டுரையின் பெயர் - ஒரு உறவு, ஒரு நினைவு, ஒரு நூல். இருகதையிலும் கதை மாந்தர்கள் ஒரு விஷயத்தையே கையாளுகிறார்கள். ஆனால், கையாளும் கோணங்கள் வேறுபடுபவை. இரு வேறு கோணம்.

அதில் கதைநாயகன் சொல்வதாக ஒரு வரி - “சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை (முழுமை).நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி”.

இங்கும் அனுபமா, நகக்கீறல்மேல் பனிக்கட்டியைத்தான் வைக்கிறாள். ஆனால் பனிக்கட்டியாய், தான் அடையாத உறவின் நினைவையே வைக்கிறாள் - Nostalgic Catharsis - நினைவின்வழி உளவெளியேற்றம்.


நினைவுகள் முள்ளாய் முளைவிடும்போது, அந்த துருத்தலில் சில நொடிகள் ருசித்திருந்துவிட்டு, அதனை களையும் வலி தெரியாமல் களைந்தெறிந்துவிட்டு , கரைக்கு மீள்வது.