May 16, 2020
1
May 16, 2020
1
ஒரு கதையில் முதல் வரியிலேயே வாசகனின் புருவமுயர்த்த முடியும் என்பதை இதுவரை நான் வாசித்ததிலேயே இதில்தான் முதன்முறையாக உணர்ந்தேன். முதல் பத்தியில் விரும்பியே அதன் ஆழத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். அதன்பின் எனக்கு தெரிந்தவையெல்லாம் ஒளிகளின் நடனம்தான். இதனை அறிவியல் பூர்வமாய் முழுதுணர அவ்வறிவியல் கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், ஒரு கற்பனைவாதியாய் என்னால் இதில் திளைக்க முடிந்தது. அறிவியல் கதைக்கு ஜெ கூறும் அடிப்படைகளில் இது ஒன்று என்பது சமீபத்தில் தெரிந்துக் கொண்டேன்.
இணை பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தாங்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று நினைக்கையில், தங்களின் வரையறை (limitations) தெரிய வருகிறது. இது எதிர்காலத்தில் நடப்பதாய் எடுத்து கொள்ள வேண்டுமா, அல்லது சமகாலத்தில் வேறு கோள்களா, அல்லது ஒளியின் பயண வேகம் பொருத்து, எந்த பிரபஞ்சத்தின், எந்த பகுதியில், எந்த தொலைவில் இது நடக்கிறது, அது நமக்கு நிகழ்ந்த காலமாய் எடுத்து கொள்ள வேண்டுமா என்று எனக்கு தோன்றியது.
ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த தத்துவம் பொதிந்த அர்த்தங்களோடு வெளிப்பட்டன. எனக்கு இவ்வொரு கதையில் மேலை தத்துவவாதிகளின் கோட்பாடுகளுக்கிடையில் ஒரு கோடிழுத்துவிட்டதாய் தோன்றியது. Schelling naturphilosophie முதல் Schopenhauer மற்றும் ஹெடக்க்கரின் கோட்பாடுகள் எனக்குத் தோன்றின. கான்ட் பற்றி கதையில் வந்துவிடுகிறது.
“இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆம், நாம் படைப்பாளி. ஆனால் நாம் படைத்த ஒவ்வொரு பிரபஞ்சமும் அதன் சொந்த விதிகளையும், நியதிகளையும் கொண்டுள்ளது. அவற்றை மீறி நான் தலையிட முடியாது.
“படைப்பாளியாக இருப்பது என்பது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும் கூட. நாம் படைத்த ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.”
“அவற்றின் கண்களில் கோடி ஆண்டுகளின் ஞானமும், எல்லையற்ற கருணையும் பிரகாசித்தன”.
எனக்கு பிடித்த விஷயம், கதைக்குள் மனித உணர்வுகளால் சிடுக்கு ஏற்படுத்தி, அதற்கான விடுதலையை ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் தேடி தந்தது.
“நாம் தனித்தனி தீவுகள் அல்ல. நாம் ஒரே பெருங்கடலின் அலைகள். ஒவ்வொரு அலையும் மற்றொரு அலையை உருவாக்குகிறது, முடிவில்லா நடனத்தில்.”
ஆயிஷா வாசகனின் குரலாய் வருகிறாள். வாசகன் தவறவிடாத வண்ணம் அவளே எடுத்தும் சொல்லிவிட்டாள்.
நமது ஆராய்ச்சி இப்போது வெறும் அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமல்ல. இது ஒரு தத்துவ பயணம், ஒரு நெறிமுறை கற்றல், ஒரு ஆன்மீக அனுபவம்.”
இவ்வருடத்தில் நான் வாசித்து திகைத்த, திளைத்த மிகச் சிறந்த கதை. கோதுமை மணி ஒரு தளத்தில் மனதிற்கு நெருக்கம் என்றால், இது வேறொரு தளத்தில் இன்னும் நெருக்கமாய். இந்த கதையை நான் மீள்வாசிப்பு செய்து கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது.
இலக்கியத்தில், உருவாக்கும் படைப்பு என்பது வாசகனின் சிந்தனைக்கான ஒரு திறப்பாய், வாயிலாய் அமைய வேண்டும். அதன் தொடர்பான சாத்தியங்களை, வரலாறுகளை, நிகழ்வுகளை, தத்துவங்களை தேடி அவன் செல்ல வேண்டும்.
இக்கதையை வாசித்தபின், என் சிந்தனைகளை தொகுக்க முற்பட்டபோது, அது மூன்று வகையாக பிரிந்திருப்பதை உணர்ந்தேன்.
ஒன்று, கருப்பொருளின் சாத்தியம் மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகள், தரவுகள் நோக்கிய என் பயணம்.
இரண்டு, கதைக்கொடுத்த மனித உணர்வுகள், கேள்விகள்
மூன்று, அந்த கேள்விகளின் வழியிலான ஒரு தத்துவ பயணம்
முதலாவதாக நான் சொன்னது, பொதுவாக யார் சென்று தேடினாலும் கிடைக்க கூடியவையே. அது இங்கு அவசியமல்ல.
இரண்டாவதான - மனித உணர்வுகளும், கேள்விகளும்
கதையில் ரேவன் என்ற மூத்த ஆராய்ச்சியாளர், தனது இளவலான ஆராய்ச்சியாளர் நிதன் உலகிற்கு தந்த தீர்வு, எதிர்காலத்தில் அல்லது நிகழ்காலத்தின் அதன் செயல்பாடு குறித்த தனது அனுமானங்களை,அல்லது தனக்கு உண்மையென்று தோன்றுபவையெ, ஒரு நிருபரின் வழியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த நிருபர், வாசகனுக்கான உருவகம். கதை போக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எவ்வித உணர்வுகளுக்கு ஆளாகிறோமோ அவையெல்லாம் அவன் வெளிக்காட்டுகிறான். அல்லது, அவன் வழியே அவ்வுணர்வுகளை நம் மூளையில் முடுக்கி விடுகிறார் என்று சொல்லலாம்.
கதையின் முடிவில்,
ரேவன் சொல்வது முற்றிலும் நம்பக்கூடியதா அல்லது அவரின் காழ்ப்புணரச்சியினால் சொல்லக்கூடியதா? என்ற கேள்வி எழுகிறது.
அதே சமயத்தில், சுருதி, அனுமானத்திற்கு பின் பிரத்யட்சம் இருக்கத்தானே செய்யும், அப்போது அவர் சொல்வதை நம்பாமல் இருக்க இயலவில்லை என்றும் தோன்றுகிறது.
வேர்முள் - வெளிப்படையாகத் தெரியாத, ஆனால் ஆழமாகச் சிக்கியிருக்கும் பிணைப்பு – அது நினைவாக இருக்கலாம், உறவாக இருக்கலாம், அல்லது வலியாக இருக்கலாம்.
இவை மூன்றிலும் பிணைக்கப்பட்டவளாய் அனுபமா!
தன் பருவக் காலந்தொட்டே தன்னுணர்வுகளையும் விட, தன் தாயின் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுண்டு வளர்ந்த ஒரு பெண். தனது ஆசைகளையும், தேவைகளையும் தாண்டி, தன் தாயை முன்னிருத்துபவளாய் இருந்திருக்கிறாள். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த கட்டுப்பாடு தளர்ந்ததா என்றால் இல்லை. திருமணம் ஆன பின்பும் கூட, தன் மகளை தன்னுணர்வுக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்க நினைப்பவளாய் கலையரசி, அனுபமாவின் தாய்.
போலி கெளரவத்தில் உழன்று திரிபவள். எழுத்தாளர் ஒரு வரியில் அவள் குணத்தை உடைத்துவிடுகிறார். திருமணம் முடிந்து வந்து தன்னறையில் நுழைகையில், தன் நாத்தனாரின் ஒரு பொருளை அப்புறப்படுத்தும் விதம் அவளை அப்பட்டமாய் காட்டிவிடுகிறது. பொதுவாக, அப்பா கெளரவ வசனங்கள் பேச கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம், அது பெரிதாய் பாதிக்காது. ஆனால் அம்மா அவ்வாறு செய்கையில் அதன் வீச்சம் அதிகம்.
அவ்வாறான தன் தாயின் பேச்சு, அந்த பேச்சு தந்த வலி, அனுபமாவை , தன் மேலேயே கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது.
அந்த கழிவிரக்கம், அவளை நினைவுகளுக்குள் இழுக்கிறது. அந்த நினைவுகளும் வலி தருகின்றன.
அந்த வலி நினைவில் தோன்றியதும், தான் விரும்பிய உறவு மனதில் அலைமோதுகிறது. உண்மையில் அந்த உறவை அமைத்து கொள்ள விரும்பினாளா? அல்லது அவளது ஆழம் அவள் தாயுடன் பிணைக்கப்பட்டிருந்ததா?என்ற கேள்வி என்னுள்.
தன் தாயின் முடிவுகளுக்கு எல்லாம் ஒத்துக்கொண்டது, தனது இயலாமையினால்தான் என்று ஒப்புக் கொள்கிறாள். ஆனால் எனக்கோ , அவள் தனக்கு வேண்டும் என நினைத்தது, உண்மையில் தன் அடி ஆழத்தில் அவ்வாறு நினைக்கவில்லை போலும் என்றும் தோன்றியது.
அவ்வுறவின் நினைவலை மோதினாலும் , அதனை இயல்பாக கடந்து செல்கிறாள்.அதில் ஆசுவாசமும் பெறுகிறாள். எந்த சலனமும் இல்லை.
சென்ற வாரம், ஜெ தளத்தில் ஒரு கட்டுரை. இக்கதையோடு ஒப்புநோக்க முடிபவை. கட்டுரையின் பெயர் - ஒரு உறவு, ஒரு நினைவு, ஒரு நூல். இருகதையிலும் கதை மாந்தர்கள் ஒரு விஷயத்தையே கையாளுகிறார்கள். ஆனால், கையாளும் கோணங்கள் வேறுபடுபவை. இரு வேறு கோணம்.
அதில் கதைநாயகன் சொல்வதாக ஒரு வரி - “சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை (முழுமை).நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி”.
இங்கும் அனுபமா, நகக்கீறல்மேல் பனிக்கட்டியைத்தான் வைக்கிறாள். ஆனால் பனிக்கட்டியாய், தான் அடையாத உறவின் நினைவையே வைக்கிறாள் - Nostalgic Catharsis - நினைவின்வழி உளவெளியேற்றம்.
நினைவுகள் முள்ளாய் முளைவிடும்போது, அந்த துருத்தலில் சில நொடிகள் ருசித்திருந்துவிட்டு, அதனை களையும் வலி தெரியாமல் களைந்தெறிந்துவிட்டு , கரைக்கு மீள்வது.
பூன் முகாம், மாலை நடையில், பின்னிருந்து வந்து என் நடையுடன் இணைந்து கொண்டு, மெல்லிய குரலில், என்னிடம் பேசிய விசு என் கண் முன்னே தோன்றுகிறார். அதற்கு முன்னரே பிரமோதினியும் நானும் ஒருவாறு பழக ஆரம்பித்து இருந்தோம். முதல் நாள் மாலை அறிமுக அரங்கில், செளந்தர் அண்ணா, ஜெ உடனான விசுவின் பயணம் பற்றியும் அதை ஒட்டிய அவரது அனுபவ பகிர்வு விரைவில் வரப்போவது பற்றியும் கூறியிருந்தார்.
ஒரு அழகான, நிறைவான முதல் படைப்பு. தனது ஆதர்ச ஆசிரியருடனான பதினைந்து நாள் சாலை வழிப்பயணம், ஒரு பரந்து விரிந்த அனைத்து மாதிரியான நிலப்பரப்பில். மிக எளிமையான, நேர்மையான ஓர் அனுபவ பதிவு. நூலின் வெற்றி என நான் பார்ப்பது, ஆர்ப்பாட்டமில்லாத நம்ம வீட்டு பாட்டி, திண்ணையில் உட்கார்ந்து, பூ கட்டுவது போலான ஒரு அனுபவம்.
விசுவின் எழுத்தில் நகைச்சுவை உணர்வு இயல்பாகவே இருக்கிறது. பல இடங்களில் சிரித்தேன். மேலும் அவர் வழி நெடுக கூறியிருக்கும் நூல்களும், குடிகளின் வரலாறுகளும், இந்த புத்தகத்தை என்றென்றுக்குமான ஒரு உ.சா.துணையாக மாற்றுகிறது. இந்த புத்தகத்தை வாசித்தப்பின், நானும் பிரேமும், இவ்வழியில் ஒரு பயணம் மேற்கொள்வோமா என்று பேசிக்கொண்டோம்.
தனது வாழ்வின் அனுபவங்களையும், நிலத்தின் வரலாற்றினையும், அவற்றை ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளுடன் பொருத்தி பார்த்து ஒரு வரைபடம் தருவதும், நூல் முழுதும் விரவியிருக்கிறது. மிகவும் கவனத்துடன், ஒருமையுடன் எழுதியிருக்கிறார். எங்கும், எதிலும் மிகையில்லை. Diet Control-ல் இருக்கும் ஹீரோ போல், நூல் கட்டுடலுடன் இருக்கிறது. அவரின் ஒவ்வொரு வெளிப்பாடிலும், ஒரு கவனமான மாணவனின் தோற்றம் வெளிப்படுகிறது.
எனக்கு மிக பிடித்த விஷயம், ஒவ்வொரு கட்டத்திலும், ஜெ உடனான அவரது உரையாடல். அவர் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெ அளித்த பதில்களும் முக்கியம் வாய்ந்தவை. அதை அவர் கையாண்டிற்கும் வடிவமும் அழகு.
இலக்கிய வாசகர்கள் பற்றிய அவரது அவதானிப்பு, பெருமளவிற்கு உண்மை என்றே தோன்றுகிறது. என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நபர், எனது ஆசிரியர் என்று ஆகிவிட்ட நிலையிலும், இது வரையிலும் அவரை நேரில் பார்க்கும்போது, என்னுள்ளே உள்ள நடுக்கம் தணியவில்லை. அந்த நடுக்கம் பயமில்லை. ஒரு மாமலை முன் மடுவாய் உணருகிறேன். ஆனால், எனக்குள் இப்போது எல்லாம் சொல்லிக் கொள்வதுண்டு, “அந்த பிரமிப்பை நெஞ்சோரத்தில் சேமித்து வைத்துவிட்டு, அவர் முன் சென்று நில்”, என்று. அந்த வகையில், விசுவிடம் இன்னும் பிரத்யேகமான ஒரு வாஞ்சை உருவாகிறது. அவரது இந்த முன்னெடுப்பு, ஆசிரியர் முன் தயக்கத்தை களைத்து, முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கும் மாணவனின் மனநிலையை உருவாக்கி தந்து எனக்கு ஒரு வகையில் ஊக்கமளிக்கிறது.
மேலும், இப்பயணத்தை பற்றி குறிப்பாக சொல்லியாக வேண்டும். ஒவ்வொருவரின் ஆர்வமும், அந்த ஆர்வத்தை குலைத்திடாத மற்றவரின் அனுசரிப்பும், இவை அனைத்திற்கும் தடையிடாது, தலையிடாது பயணத்திற்கு மட்டுமே பயணம் என்ற நிலைக்கு ஒப்புக்கொடுத்து, அதன் விளைவாய் கிடைத்த ஒட்டுமொத்த அனுபவங்களையும் தனது நண்பர்களுக்கு பொக்கிஷங்களாய் மாற்றிய ஜெ மற்றும் அருணா அக்கா, தேரில் அமர்ந்திருக்கும் உற்சவர்களாகவும், இலக்கியம் என்ற வடத்தில் அணிவகுத்து, ஒருங்கிணைந்து தேரிழுத்த நண்பர்கள், பக்தர்களாகவும் தோன்றுகிறார்கள். (மறுபடி மறுபடி இதே படிமம், என்னுள் எழுந்துவந்து கொண்டே இருக்கிறது, அது சரி, திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருவீதி உலா பற்றி நினைக்காமலா?)
இலக்கிய ஞானிக்கு, அவரது சீடர்கள் சார்பில் விசு கொடுத்த இந்த சியமந்தகம், என்றும் ஓங்கி ஒளிர்வது.
சில பாடல்கள், சட்டென்று பரவசத்தை பரப்பிவிடுகிறது மனதில். ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், ஒவ்வொரு தடவையும் நீர் பரப்பில், இலாவகமாய் இறங்கி, கிறங்கடிக்கும் பறவையை போல. ஆளில்லா வானத்தை ஸீவகரித்து உல்லாச பயணங்கொள்ளும் பருந்தை போல. அது, தன் சிறகை கீழ் அழுத்தி கொடுக்கும் ஒரு விசையில், ஒரு பாடல் தூரமே பயணிக்கும். ஆனால் மேலுயர்ந்தும், சரிந்தும் அது போகும் தூரமானது, நான் அப்பாடல் தரும் கற்பனையிலும், நினைவுகளிலும் போவது போன்றது. ஆகாய கங்கையில் ஒரு ஆனந்த நீச்சல் அது.
அப்படி ஒரு உணர்வினை என்றும், எக்கணத்திலும் எனக்குள் ஏற்படுத்தும் பாடல்களுள் முதன்மையானது “சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு…”என்னும் பாடல் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இருந்து. (பஞ்சாபி நாட்டுப்புற பாடலான “Laung Gawacha” பாடலின் அதே மெட்டில் அமைந்த பாடல்தான் என்றாலும், முகப்பிசை, இடையிசை நம்மூர்க்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். )
“சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு
அது தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானமிருக்கு..”
எழுத தொடங்கியபோது, இப்பாடலின் வரிகள் என் நினைவில் இருந்தத்தாய் தடங்கள் இல்லை. பாடல்கள் பற்றி எழுத நினைத்ததும் இயல்பாய் வந்தமைந்த படிமம், பறவை. அதை கொண்டு தொடங்கி வரிகளை எழுதி வந்தபோது, இரண்டும் இசைவு கொண்டதிலும் பரவசம் நுரைத்து பரவுகிறது நெஞ்சில்.
"உள்ளத்தை அள்ளித்தா" படத்தை நினைத்தாலே இனிமையான நாட்களின் தித்திப்பு மனதில். எனது பள்ளி விடுமுறை நாட்கள் முழுவதும் சித்திரைப்பட்டியில் தான் (துறையூரில் உள்ள ஒரு கிராமம்). அப்போதெல்லாம் படங்கள், பாடல்களில்தான் முழு பித்து. சிறு வயதில் ஊரில் மட்டுமே பெரும்பாலும் குடும்பத்துடன் படங்களுக்கு சென்றிருக்கிறேன். துறையூரில் மூன்று தியேட்டர்கள் அப்போது. பிரசன்னா, பாரதி மற்றும் அஜந்தா தியேட்டர்கள். அதில் பிரசன்னா தியேட்டர் சற்று பெரிதானது. தியேட்டர்களில், Box டிக்கெட்கள் வாங்கி மாடியில் உட்கார்ந்து பார்க்கும் கர்வம் மிகுந்த நாட்கள் அவை.
ஊரில் இருக்கும் நாட்களில், பொதுவாய் காலையில் 8:30 மணிப்போல், வீட்டுத் திண்ணையில் ஒரு சிறு மாநாடு நிகழும். குடும்பத்து ஆளுங்க தான். வேறு என்ன, வந்த கதை, போன கதை என்று அரைத்த மாவை அரைக்க ஆரம்பிப்பார்கள். அப்போது என் மிலிட்டரி மைண்ட் தீவிரமாக வேலை செய்ய அரம்பிக்கும். இன்று என்ன செய்யலாம். எங்கு போகலாம். புதுசா என்ன படம் வந்திருக்கு? இப்படியான யோசனைகளும், அதை தொடர்ந்து திட்டங்களும். அன்றைய திட்டம் படம் பார்க்க போவது. பொதுவாக, அப்பாவின் நாடி அறிந்து, நேரம் பார்த்துக் கேட்பேன். ரஜினி படமென்றால் எந்த முயற்சியும் தேவையில்லை, வேலை அது பாட்டுக்கு நடந்து, எல்லோரும் பயபக்தியாய் கிளம்பிவிடுவார்கள். (இச்சமயத்தில், ரஜினியிடம் இவர்களுக்கு இருந்த பக்தியில், தமிழில் கோலோச்சிய ஒரு சென்சிபிளான நடிகனை, கண்ணில் காட்டாது, எங்கள் வீட்டில், என் வயசு பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள் என்பதை சொல்லியாக வேண்டும். அதில் மிக முக்கிய பங்கு என் சித்திக்கே. பின்னாளில் நானே ஒரு படத்தில், ஒரு காட்சியை கண்டு தெரிந்து கொண்டேன், என் குடும்பம் கலைக்கு எதிராய் எவ்வளவு பெரிய சதி செய்திருக்கிறது என்று. அந்த படத்தின் பெயர் ‘தெனாலி’, அந்த நடிகன், பெயர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?)
கார்த்திக்- அம்மாவிற்கும், சித்திக்கும் பிடித்தமானவர். ஆகையால் நான் இப்படத்திற்கு பெரிதாய் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை. ஆனால் எனக்கு இன்னொரு பிளான் இருந்தது. ‘பூவே உனக்காக’ படமும் ஊரில் ஓடுகிறது. அதையும் பார்த்துவிட வேண்டும் என்று. சித்தியை விட்டு, என் அப்பாவிடம் கேட்க வைத்தேன். எங்க அப்பா, “ஒரே நாளே பாக்கணுமா, ஒரு படம் போயிட்டு வாங்க” என்று குரல் எடுக்க, நான் சித்தியின் அப்பாவிடம் சிபாரிசுக்கு சென்றேன். வீட்டிற்கு பெரியவர். “விடுய்யா போயிட்டு வரட்டும். ஆட்டோ செலவு ஒன்னா போயிடும்ல” என்று சொன்னார். அதற்கு எல்லாம் மசியுற ஆள் என் அப்பா இல்லை என்றாலும், தனது மாமன் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார். நமக்கு அவ்வளவுதான் வேணும். காலை காட்சி 10:30க்கு பிரசன்னாவில் ‘பூவே உனக்காக’. மதியம் 2 மணி காட்சி அஜந்தாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’. நடுவில் சாப்பாடு பற்றியெல்லாம் யாருக்கும் எண்ணமே இல்லை. சில பல கோதுமை இனிப்புகளும், பஜ்ஜிகளும், கோன் ஐஸ்களுமே வயிற்றுக்குத் துணை. வழித்துணைக்கு என் இரு மாமன்களில் யாரும் ஒருவர் எப்போதும் வருவார்கள். அந்த தடவை ஆனந்த் மாமா. அவர் வந்தால் பலகாரங்களுக்கு பங்கமில்லை. வாங்கி அடுக்கிவிடுவார்.(இன்று வரை அப்படித்தான்).
எனக்கு இன்னும் தெளிவாய் நினைவிருக்கிறது. இரண்டு படத்தில் எதை முதலில் பார்ப்பது என்று ஒரு குழப்பம். என் அம்மா, சித்தியிடம் கேட்டால், “உன் இஷ்டம் பாப்பா” என்றார்கள். என் தம்பி சிறு பிள்ளை. நான் தான் முடிவெடுக்க வேண்டும். அதுவே ஒரு கிளர்ச்சிதான். எனக்கு மிக பிடித்த ஒன்றை சீண்டாமல், தீண்டாமல் இறுதி வரை வைத்து ரசிக்கும் பழக்கமுண்டு. இன்று வரையிலும் அப்படித்தான். Dairy milk-ம், Lacto king -ம் கையில் இருந்தால், எனக்கு சுமாராக பிடிக்கும் லாக்டோ கிங் தான் முதலில் தேர்ந்தெடுக்கப்படும். “Saving the best for the last” என்பது போல், மிக பிடித்ததை கடைசியாய் சுவைக்க வைத்திருப்பேன். அப்படித்தான் உள்ளத்தை அள்ளித்தா.
‘பூவே உனக்காக’- விஜய், என்னுடைய craze. போய் பாக்கணும் அவ்வளவுதான். மற்றபடி படம் பற்றியெல்லாம் தெரியாது. உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டமணி, செந்தில் இருக்கிறார்கள். ஜாலியாக இருக்கும் என்ற எண்ணம். அந்த வயதில் காமெடிதான் பிரதானமாய் தெரிந்தது.ஆகையால் பிடித்ததற்கு முன்னுரிமை கொடுத்து பின்னுக்கு தள்ளிவிட்டிருந்தேன்.
முதல் படம் கொடுத்த ஒரு இனம் புரியாத வலியை, இந்த படம் ஆற்றிக் கொண்டிருந்தது. தொடர்ந்து வயிறு குலுங்க தியேட்டரே சிரிப்பில் மூழ்கியிருந்தது. இடைவேளை முடிந்து வரும் பாடல் இது. படத்தின் கடைசி பாடலும் கூட. முன்னரே பாடல்களை ரேடியோவிலும், திருச்சி சங்கம் ஹோட்டலில், ஜமீலா அக்காவின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கேட்டிருந்தேன். “ஐ லவ் யூ லவ் யூ” பாடல்தான் எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடல் இருப்பதே தெரியாது. எனக்கொரு இனிய அதிர்ச்சியாய்தான் இந்த பாடல் படத்தில் இருந்தது.
பாடல் ஆரம்பிக்கும் விதமே ஒரு கொண்டாட்டத்திற்கான முகாந்திரமாய் தோன்றும். குளிரோங்கிய காலை பொழுதில், ஓட முடியாமல் பாதியில் கவுண்டமணி அண்ணன் நின்று விட, எல்லோரும் அங்கே ஆஜராக, செந்தில் அண்ணன் சைக்கிளில் வந்து அங்கே பிரேக் போட்டு வசனம் பேச, அவர் சைக்கிளை உதைத்து விடுவார் கவுண்டமணி அண்ணன். அந்த சறுக்கலில் அவர் சரிந்து செல்ல, பாடலின் கொண்டாட்டம் துவங்கும்.
ராஜாவிற்கும் (கார்த்திக்), இந்துவிற்கும் (ரம்பா) இடையே காதல் மலர்ந்திருக்கும் நேரம்.
தேநீர் கோப்பைகளை எடுத்து கொண்டு, விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு இந்து வரும்போது, ஒரு close shot ராஜாவிற்கு. பந்தை ஒரு ஷாட் அடித்துவிட்டு அவர் இந்துவை பார்ப்பதுபோல. அதை கட் செய்ததும், தனது மாராப்பை சரி செய்வது போல், சுடிதார் ஷாலை சரிசெய்து கொண்டே, புது மலர் விரியும் வெட்கத்துடன் ஒரு பார்வை வீசுவாள் இந்து. இப்போது கண்ணில் அக்காட்சியை நிறுத்தி பார்த்தால், கார்த்திக்கின் கவனம் டீ கோப்பையில் மட்டுமே இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்துவின் அப்பார்வை, காதல் தரும் பரவசத்தில் மூழ்க தொடங்கியிருப்பவளாய் தோன்றும். தனக்கான ஒருவனை கண்டடைந்ததும் பெண்கள் போகும் அந்த கற்பனையின் தொலைவிற்கு ஒரு ஆணால் ஈடு கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் அந்த பெண் கவிதைகளிலும், காவியங்களிலும் திளைப்பவளாய் இருந்தால், இன்பம் அலாதி.
இருவரில், காதலுக்காக முயன்றவன் ஆணாய் இருந்தாலும், காதல் வந்ததும், அதை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் தைரியம் அவளுக்கே இருக்கிறது. அவள் கேட்கிறாள்,
தொட்டவுடன் சிணுங்கிடும்
செடி ஒன்னு இருக்கு
தொட்டவுடன் மொட்டுவிடும்
கொடி என்ன சொல்லவா
கொடி என்ன சொல்லவா?
அதை கேட்டதும், அவன் அறிந்து கொள்கிறான், தன் கரம் பிடித்து, அவள் அழைக்கும் பயணத்தை. அதற்கு அவன் பதில் சொல்கிறான்,
மின்னலுக்கு வெட்கம் வர
மண்ணில் வந்து நடக்கும்
கன்னிமகள் சின்ன இடை
கொடி என்று சொல்லவா
கொடி என்று சொல்லவா..
சொன்னதும் அவள், அவன் தன் எண்ணத்தை தொட்டுவிட்டதில் சிலிர்த்து விடுகிறாள். தன்னையே தொட்டுவிட்டதாய் துடித்து உவக்கிறாள். அடுத்த சூசக கட்டளையிடுகிறாள், அவனுக்கு.
சிக்கி முக்கி கல்லப்போல
பத்திகிச்சு நெருப்பு
நெஞ்சுக்குள்ள
ரெண்டு பங்கு துடிப்பு
நான் பச்சை வாழையா
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்
நீ சாரல் மழையா..
அந்த ஆணின் கைகளும் கவிதையில் நனைந்திருந்தால், அங்கு மலரும் மலர்களின் வாசமே மூர்ச்சை தரும். அதில் ஒரு நிம்மதி பிறக்கும்.
வண்ணமதி வட்டமதி
வானத்திலே இருக்கும்
பூமி எல்லாம் தேடும் மதி
என்னவென்று சொல்லவா
என்னவென்று சொல்லவா
நீ எனக்கு தந்த மதி
உன் மடியில் கிடைக்கும்
‘நிம்மதி’ தான் என்று உந்தன்
காதில் வந்து சொல்லவா
காதில் வந்து சொல்லவா…
காதலில் ஆழும் மனதானது, தன் இணையின் உருவத்தை, உணர்வை, பெயரை சொல்லி சொல்லி உவகை கொள்ளும், அதில் உள்ளம் தாங்காமல் நோவும் கொள்ளும். அது தரும் தகிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லும் அந்த சொல்லாட்சி, சொல்லும் தருணமெல்லாம், என்னுள் உவகை எழும். அந்த தகிப்பை தணிக்க அவள் மழையாகும் அழகு, பாடலின் அழகான முத்தாய்ப்பு.
உள்ளமெங்கும் உன் பெயரைச்
சொல்லி சொல்லி துடிக்கும்
உள்ளுக்குள்ளே
‘ஊமை வெயில்’ அடிக்கும்
பனி சிந்தும் பூவனம்
போர்வை போலென்னை மூடும்
ஒரு சேலை மேகம்
மணிவண்ணன்-கவுண்டமணி அவர்களின் உரையாடல் சந்தத்தோடு, இப்பாடலின் இடையிசையாய் (Interlude) அமைந்திருக்கும். ரம்பாவின் ஆடை வடிவமைப்பு ரசிக்கதக்கதாய் இருக்கும். ரம்பா இயல்பிலேயே நல்ல நடனம் ஆடக்கூடியவர். அவர் பாட்டுக்கு ஆடும்போது, கார்த்திக் அவர்பாட்டுக்கு ஆடுவார். அதில் ஒரு இயல்பும், அவர் உள்ளூர ரசிக்கும் உணர்வும் அழகாய் வெளிப்படும்.
படம் வந்து ஐந்து வருடங்கள் கழித்து, அதே குரூப்பாக நாங்கள் ஊட்டி சென்றிருந்தபோது, படமாக்கப்பட்ட அந்த பங்களா, பாடல் எடுக்கப்பட்ட பைகாரா அருவி பகுதிகள், படத்தில் முக்கியமாக இருந்த அந்த அலமாரி என்று கண்டு களித்தோம். முப்பது வருடம் நெருங்கியும், இன்னும் அந்த நினைவுகள், அழகான ஊட்டி காலநிலையில், எங்கோ தன் பார்வையை செலுத்தி, இளைப்பாறிக் கொண்டிருக்கும், அந்த குதிரையின் கண்களில் நிலைத்திருக்கின்றன.
*