ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மரபிலக்கிய வகுப்பு (ஜனவரி 17,18,19) - அனுபவ வெண்பாக்கள்

எனது ஆசிரியரின் ‘முழுமையறிவு’ தளத்தில், கீழ்க்கண்ட எனது வெண்பாக்கள் வெளிவந்தன:


இணைப்பு :  https://unifiedwisdom.guru/200905



விரிமலைகள் வாயில்முன் மாமகளி தழ்நகைக்க

நேர்விழி வானர் குலம்வழி - நிற்க

வளையெறும்பர் சீரமைத்து மண்மகளை சூழ

நித்யவன தாள்பணிந் தேன்


நெய்குருவி செம்பருந்தோ டுச்சேதி சேர்த்திட

சேய்பருந்தோ விண்மீன்கள் கைக்கோர்த்து - ஆய்ந்திட

வெள்ளி முளைவில்கூ தல்உரைக் கம்மண்

மரபுழ வன்எழுந் தார்


பாரதித்தொ டங்கி இருதா சனுடனல்கி

பாரதத் தில்லுருகி கம்பர்முன் - நற்றணுகி

அவ்வை கவியுடன் மென்னடை வந்துவந்து

காலனையே பந்தடித் தோம்


காளமேகத் திற்மிதந்து ரெட்டையரு டன்னகைத்து

பிள்ளைத் தமிழோடசைந்து காற்சிலம்பாழ்- நல்மணியாம்

மேகலையை கோர்த்தெடுத்து  நட்குறள றிந்தோம்

இயலிசைக்க டல்நனைந் தோம்


நறுக்கலையின் கொம்பனாய்அ டுக்களையின் வீரனாய்

நற்சுவையாறில் ஆவலாய் ஆரணியக் காவலாய்

எம்பசிநீக் கும்மிருவர் பல்சுவைக்கோ அங்கொருவர்

அந்தியூர் தந்த மணி


முப்பதெட்டு நாழிகைகள் ளாய்பாகாய் தாய்தமிழ்

அப்பாயு னைத்தொட்டு நின்முன்னே ஒப்படைத்து

சுட்டிடர்க ளைத்து உணர்வுகளால் கட்டுண்டு

கட்டவிழ் காற்றாயா னேன்



வெள்ளி, 10 ஜனவரி, 2025

தூவானம் [ ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ் சிறுகதை - அஜிதன் ]


ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரையும், படங்களையும் கண்டவுடனே யாரைப்பற்றி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. அவரை பற்றிதான் கதை. அதை எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்ற உற்சாகத்தில்தான் வாசிப்பை ஆரம்பித்தேன்.

அந்த சிறுவனின் வாழ்க்கையை கரிசல் மண்ணில் விரித்தெடுத்ததும், அவன் பின்னே சென்று கொண்டிருந்தேன். அவன்தானோ ‘அவர்’ என்ற எண்ணம் முதலில். பின் அவரை பற்றியே இல்லையோ என்றும், இல்லையில்லை அவர்தான் என்றும் மனதில் சடுகுடு விளையாட்டு. முதல் பாகத்தை முடிக்கும்போது ‘நான் அவர் குரலை கேட்டேன்’ என்றதும், மனதில் ஊர்ஜிதமாகி ஒரு சபாஷ் போட்டேன். என்ன அழகான கோணத்தில் ஒரு கதை!


என்னைச் சுற்றி எல்லா திசைகளும் ஒரேபோல அந்நியமாகத் தெரிந்தன. எப்போதும் திறந்து கிடக்கும் பாதை என்பது அது ஒன்றுதான். உடல் பற்றி எரிபவன் ஒரு சிறு துளி நீரை தேடி அலைவதைப்போல நான் திரிந்தேன். அப்படி ஒரு நாளில், கரிசல் மண் உருகி தகிக்கும் கோடை மதியத்தில், நான் அவர் குரலை கேட்டேன்”.


“அவர் வருகை ஓர் அலை போல தமிழ்நாட்டில் நிகழ்ந்தது”- இக்கதை என்னுள் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இது நெருக்கமாய் தோன்றுகிறது? கதையின் பின்னல். கதை சொல்லியின் பின்னணியும், சூழலும், அவனின் உளவியலும் அந்த பின்னலின் வலுவான கண்ணிகள்.


“முகம் தெரியாத இருளில் அவன் குரல் தீமையின் அடியாழங்களுக்குள் சென்று வருவதைத்திகைப்புடனும் குறுகுறுப்புடனும் கேட்டிருக்கிறேன்பகலில்கூட அவன் கண்களை நான் அதிக நேரம்பார்க்க துணியவில்லை”.


“…….எங்காவது தொலைவாக ஓடிச்செல்வதை பற்றிச் சிந்திக்க துவங்கினேன்எங்குச் செல்வதுஎன்று எனக்கு எந்த வழியும் தெரியவில்லை


எல்லாவற்றையும் மனிதனிடமிருந்து பறித்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் பறிக்க முடியாது—எந்த சூழலிலும் தனது மனப்போக்கைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை.” என்கிறார் விக்டர் பிராங்கில். (From Man’s Search for meaning - Viktor Frankl).


இந்த கதை சொல்லியின் எண்ணவோட்டம் விக்டரின் கூற்றை ஒத்திருப்பதாய் தோன்றியது. எழுத்தாளர், வாசகர்முன் இரு வேறு மனப்போக்கு உடையவர்களை அருகருகே நிறுத்தி காட்டியதும், அங்கிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து தன் பாய்ச்சலை நிகழ்த்தியதும் அபாரம். அந்த தேர்வும் முக்கியமானதாகிறது.


(கதை சொல்லி) அவனே அறிந்திராத அவன் மனதின் ரசனை அல்லது அந்நேரத்தின் தேவை, உளவியல் ரீதியில் அவனை பாதித்ததுமாகவும், மீட்டெடுத்ததுமாகவும் அமைத்திருப்பதே கதையின் வலுவாய் நான் பார்க்கிறேன். 


அந்த கதை சொல்லி, தன் ஊர் அருகே சேர்ந்த ஒருவரை, சிறுவயதில் தன் பாட்டனுடன் சென்று பார்த்து, கேட்டு மனதில் பதிந்து போன அந்த பிம்பத்தை, பின்னாளில் தன் மீட்பராய் கருதுகிறான். இனி எதற்காக அவன் வாழ்க்கை என்பதில் ஒரு இலக்கு கொள்கிறான். 


என் வாழ்நாளில் முதல் முதலாக மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் அன்று உணர்ந்தேன்அதன் சாயலை.

அது என் மகிழ்ச்சி அல்லஅது ஒரு பொருட்டே அல்லஅந்த குரலின் மகிழ்ச்சி அதுஅதற்காகவேநான் உயிரோடிருக்க வேண்டும்அதன் இன்பத்தைக் காணஅதன் எல்லா நிறைவையும் காணஇந்தபிரபஞ்சமே எனக்கு மீண்டும் கிடைத்தது போலிருந்ததுஅன்று நான் அதை உணர்ந்தேன்தனக்காகமட்டும் வாழும் எந்த வாழ்க்கையும் காலடி மண்ணுக்குள் செரித்து அடங்கிவிடும்”


ஆடிமாதச் சாரல், கதை சொல்லியின் ஊர் நுழையும் விதத்தை சொல்லியிருக்கும் அந்த ஒரு பத்தியே, ஒரு சோறு பதம். அவன் கேட்ட குரலினை அச்சாரலோடு ஒப்பிட்டது, அழகான முதல்நிலை வெளிப்பாடு.


‘தம்தன தம்தன’ பாடல் உருவான தருணத்தில், இசைஞானி தன் நண்பர்கள் வட்டத்தில் உரையாடி கொண்டதாய் ஒரு பேச்சு அடிக்கடி உலாவும் எங்கள் நண்பர் வட்டத்தில்.


பாடல்கள், அவர் மனதில் உருவாகி வரும். அந்த அருவத்தின் பிரம்மாண்டம், வரிகள் கொடுத்தபின் சற்று குறையும், அதற்கு குரல் கொடுத்தபின் மேலும் குறையும், அது முழுவடிவம் எடுத்து வெளிவந்த பின், தன் மனதில் இருந்து எங்கோ நெடுந்தூரத்தில் நிற்கும் என்பாராம். அருவம் உருவம் பெற்றபின் எவ்வாறு உருக்குலைகிறது என்று அவர் கூறுவது, பிரம்மத்திற்கும் பிறப்பிற்குமான இடைவெளியை காட்டுவதோ என்று தோன்றும்.


இசைஞானியின் தாக்கமின்றி அனேகமாக மக்கள் இருப்பது அரிது. அந்த தாக்கத்தை மொழிப்பெயர்க்கவியலாத தளத்திலேயே இன்றும் பெரும்பாலானோர் இருப்பார்கள். பல பேர்களை வலைத்தளங்களில் கண்டிருப்போம். பெரும்பாலும் தலையை ‘இல்லை’ என்ற பொருளில் ஆட்டி, அவர்கள் உள்ளே கசிந்து கொண்டிருக்கும் உயிரின் வலியை விவரிக்க முற்படுவார்கள். நாங்கள் எங்கள் நண்பர் வட்டத்தில் பேசுகையிலும், ‘இந்த மனுசன வச்சுகிட்டு என்னத்த பண்ண போ’ என்றளவில்தான் எங்களின் வெளிப்பாட்டு இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறோம். நான் பல நேரங்களில் என் கண்ணீர் வழியே மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறேன். இருந்து வருகிறேன். பல பாடல்களை கேட்பதையே தவிர்த்து வருகிறேன். அதன் கனத்தில் என் உள்ளத்தை தாங்கி பிடிக்க இயலாததே காரணம். ஜெ-யின் தீவர வாசகர் ஒருவர், அவருக்காய் சங்கருத்து கொள்வேன் என்று தன் தீவிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறு பலவிதமான வெளிப்பாடுகள், தங்களை பாதித்த ஒருவரை நோக்கி. ஆனால் அவ்வாறு சொல்லி முடித்தும் தூவானமாய் நெஞ்சில் மிஞ்சி கிடக்கும், எடுத்து கோர்க்கவியலாத சொற்களாய் உணர்வுகள்.


அஜிதன் (மனதில் அஜி என்றே வாஞ்சையோடு சொல்லிக் கொள்கிறேன்) அந்த முதல்நிலை வெளிப்பாட்டிற்கு பின் அப்படி உணர்ந்திருப்பாரா? முழுதும் எழுதி முடித்தும் அப்படி உணர்ந்திருப்பாரா? இசைஞானியின் ரசிகராய் நான் நின்று பார்க்கையில், அப்படித்தான் உணர்ந்திருக்க முடியும் என்றே எண்ணிக் கொள்கிறேன். இன்னொன்றும் தோன்றுகிறது. இதுவரை இசைஞானியின்பால் பெருக்கெடுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதங்களில், அஜிதனின் வெளிப்பாடு, காலங்கள் கடந்தும் நிற்கும். இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து வரும் ரசிகன், இலக்கிய உலகு தெரியாதிருப்பவனாய் இருந்தாலும், இசைஞானியை தெரிந்திருந்தால்,அஜிதனை அவன் தவிர்க்கவியலாது.


மருபூமி நூல் விழாவில், அஜிதன் சிறிது காலம் திரைப்படங்களில் கவனம் செலுத்த போவதென்று முடிவெடுத்திருப்பதை கூறி, அதற்கு பாவண்ணன் அவர்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. எனக்கு அன்று அவர் கருத்து சரி என்று தோன்றியது. 


இப்போது அதை நினைக்கையில் தோன்றுவது, ஒரு இலக்கியவாதி எங்கு, எதிலிருந்தாலும் அவன் இலக்கியவாதியே. அவனுக்குள் இருக்கும் படைப்பாளி வெவ்வேறு வடிவங்களில் உருப்பெறுகிறான் என்பதே பொருள். ஆகையால் இன்று எனக்கு, அஜிதனின் திரைமொழியை காண ஆவல் பெருகுகிறது.


இன்னும்கூட தோன்றுவது, இசைஞானியின் வாழ்க்கை திரைப்படமாய் (Biopic) உருவாகி வரும் நிலையில், அஜிதனின் பங்கு அதில் இடம்பெறுவதாயின், அது வரலாற்று பதிவு என்பதை தாண்டி, ஒரு நூற்றாண்டின் நிகழ்வாய் என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது. குறைந்தபட்சமாய் இக்கதையை வாசித்தால்கூட அந்த ரசனை தீவிரத்தின் ஒரு பொறி தீண்டப்பெற்று அப்படம் வாழ்த்தப்பெற்றதாகும். 


இக்கதையின் உச்சம் அந்த ஒரு வரி. அதுவே ஒட்டுமொத்தத்தின் தொடக்கம் எனவும் கருதுகிறேன். அவ்வரியை நான் சொல்லப்போவதில்லை. அதை சொல்லாமல் இக்கதை பற்றி பேசி முடிய போவதில்லை. அதை சொன்னாலும் முடிய போவதில்லை. 


அந்த உச்சம், எச்சமாய் தொடர்ந்து கொண்டே இருப்பது. 

அது ‘இருவருக்கும்’ இடையில் இருந்து கொண்டே இருப்பது!

எந்த இருவருக்கும் இடையிலும் இருந்து கொண்டே இருப்பது!

‘எந்த’ இருவருக்கும் ‘இடையில்’ இருந்து கொண்டே இருப்பது?

இரு உருவத்திற்கும் இடையில், அருவமாய்! 

நெடுந்தூரத்தில் அல்லாமல், மனதிற்கு நெருக்கமாய்!

புதன், 8 ஜனவரி, 2025

வருகை

மேகம் சேர்ந்த மாலை வேளை

பசிபிக் கடற்கரையில் உன் பெயர் எழுதினேன்

மேகம் நெகிழ்ந்து சூரிய கிரணங்கள்

அதன் மேல் ஒளிர்ந்தன

நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்

மழை பெய்தது!

புதன், 1 ஜனவரி, 2025

மீன்வானம்பாடி

எவருக்கும் உரிய ஆசைதான் என்று தோன்றும். சிறு வயதில் அண்ணாந்து பார்த்த, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது. அதில் பறந்த பின்பும் கூட, வளர்ந்த பின்பும் கூட, அடங்காது வளரும் சிறு வயது தாகம், அதை அண்ணாந்து பார்த்து மகிழ்வது. இப்போதும் கார் ஓட்டி கொண்டு செல்லும்போது கூட குனிந்து பார்ப்பதுண்டு. அதுவும், விமான நிலையத்தின் அருகில் பயணிக்கும் போது இன்னும் நெருக்கமாய் பார்க்க கிடைத்திடும். அதன் தரையிறங்கும் அழகும், வான் ஏறும் மிடுக்கும் அதில் இருப்பதை காட்டிலும், அதன் இருப்பை காண்பதே அழகு என்று தோன்றும். இம்மாதிரி எனக்கு மலை ஏறும்போதும் தோன்றியிருக்கிறது. மாமலைகளும் கூட, அதில் பயணம் செய்யும்போது, அதன் பிரம்மாண்டம் சற்று மட்டுபட்டு, தட்டுப்படும் பாதையிலேயே கவனம் செல்லும். மாபெரும் மலையின் கர்ப்பத்தில் இருக்கிறாய் என்ற பிரக்ஞை வந்து மோதும் போது, ஒரு புன்னகையும், ஒரு செயலுமாக அது கடந்து கொண்டிருக்கும். தள்ளி நின்று பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் மீண்டும் வந்து மனதில் அப்பிக் கொள்ளும். கூடவே அதில் நான் நடந்திருக்கிறேன் என்ற உண்மையும் பிரம்மாண்டமாய் உருவெடுக்கும். பிரம்மமும் அப்படித்தானோ என்று தோன்றியதுண்டு.


என் முதல் விமான பயணம் எனது 30 வயதில். இந்தியாவில், சென்னையிலிருந்து பூனே சென்ற பயணம். திவியுடன் (திவ்யா என்பதன் சுருக்கம்) சென்றிருந்தேன். விமானம் வானேறும்போது, அவள் என் பயத்தை கண்டு, தற்செயல் போல், கரம் பற்றிக் கொண்ட சூடு என் உள்ளங்கையில் இப்போது எழுகிறது. அந்த உயரத்திலிருந்து, மெரினா கடற்கரையை பார்த்தது, எனக்கு நான் கொடுத்து கொண்ட சிறந்த பரிசு என்று தோன்றும். அவள், என்னை அடுத்த இரு வருடங்களிலேயே இன்னும் உயர பறந்து, அகன்ற நிலப்பரப்பை காண தள்ளினாள். அமெரிக்க பயணம், அவளின் வற்புறுத்தலாலேயே நடந்தது. முதல்முறை தனியாய், முப்பத்தைந்தாயிரம் அடி உயரத்தில், புள்ளியில் புள்ளியாய், ஆகாயத்தில் நிச்சலனமாய். 


இருளும் மாலை, விடியப் போகும் இரவு, விடிந்து முதிர்ந்த பகல் என்று காலநிலை முன்னும் பின்னுமாய் நாட்டியம் ஆடியது. என் வீட்டில் ஓயாமல் கேட்கும் ஒரு பழமொழியுண்டு. ‘இந்த நொடி போய்ட்டா அவ்வளவுதான், திரும்ப கிடைக்காது. காலம் பொன் போன்றது’ என்பது அது. ஆனால், அந்த விமான பயணத்தில் எனக்குத் தோன்றியது, காலத்தில் நான் பின்னோக்கி போகிறேன் என்று. வாழ்ந்த நொடிகளில், மீண்டும் வாழ்கிறேன் என்று. மினுங்கும் ஆகாயத்தில், காலம் பொன் தான். அதை நேரில் காண்கிறேன் என்று. 


எனக்கு மேலே நட்சத்திரங்கள் சிதறித்தொங்கின.எனக்கு கீழே மேகங்கள் பஞ்சு மூட்டைகளாய், மிட்டாய்களாய், ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. அந்த மேக நிலத்தில், ஒரு இரவின் முழுநிலவில், வாழைத்தோட்டத்தில், குலைகள் தள்ளியிருப்பதாகவும், சற்று தள்ளி தென்னைகள் ஓங்கியிருப்பதாகவும், ஒரு உழவன் கலப்பையை தூக்கி செல்வதாகவும் காட்சிகள் விரிந்தன. வாழை வரிசையிடுக்கில், தன் ஒளிந்திருக்கும் தம்பியைத் தேடி அந்த சிறுமி கண்ணாமூச்சி ஆட கண்டேன். அவர்களை நோக்கி கலப்பை ஏந்திய அந்த 

தகப்பனின் பார்வை.


சற்று தூரம் கடந்ததும், ஒரு மேகம், எனக்கு மேலே, ஒரு கோட்டை வாயிலின் வளைவாய் வளைந்திருந்தது. அதில் பிரமித்து உள் நுழைகையில், சூரிய கிரணங்கள் அந்தி சாயும் செந்தூரத்தில், வானை சிவக்க வைத்து கொண்டிருந்தன. இன்னும் சற்று தள்ளி, மேகங்கள் மாமலைகளாய் தொலைவில் வீற்றிருக்க, அதை தாண்டி தொடுவானம் நீள்ந்திருந்தது. சுற்றிலும் மேகமலைகள் அரண்களாய், அதற்கு நடுவில், பிரம்மாண்ட மேக ஆறு, சிறு அலைகள் தழும்ப, நிரம்பி ஓடுக்கொண்டிருந்தது. என் சித்தம், தரையிறங்கி, மேக படுகையில் கால் நடந்து அதன் அலைகளை தொட்டு சிலிர்த்தது. தூரத்தில் அருவியாய் எழுந்திருந்த மேக கங்கையில் குளித்து, குதூகலித்து, குளிர்ந்து இருக்கைக்கு மீண்டது. 


அவ்வுயரத்திலிருந்து பார்க்கையில் சில நேரம், கடல் நிலமாகவும், நிலம் கடலெனவும் மனம் குழம்பியிருக்கிறது. பாலைநில மணற்பரப்புகளின் வெம்மையை உள்ளிருந்தவாறே உணர்ந்திருக்கிறேன். பாலையை பார்த்தால், தவறாமல் என் சிந்தையில் வந்து ஒட்டிக்கொள்வான் குட்டி இளவரசன். அதை நினைக்கையிலேயே மனம் இனித்து விடுகிறது. இரவு நேரத்தில் நகரத்தின் மேல் பறக்கையில், நான்கு வழி சாலைகளில், வரிசையில் நகரும் வாகனங்கள், பட்டுத்துணியில், வெள்ளை கற்களும், மஞ்சள் கற்களும், சிகப்பு கற்களும் பதித்து தைத்த அங்கியோரம் (Blouse Border) போன்று காட்சியளித்தன. ஒரு வழிச்சாலையில் மெதுமெதுவாய் வால் பிடித்தவாறு ஊரும் வாகனங்கள், ஒரு நீண்ட கம்பளி பூச்சியாய் தென்பட்டன.


விமானம், நிலையத்தில் நிற்பதை காண்கையில், அதன் வாய் மீனினை ஞாபகப்படுத்தும். மீனிற்கு, இறக்கை கொடுத்து, வானுக்கு ஏத்திவிட்டதை போல் தோன்றும். (இதை எழுதும்போது, மதன் கார்க்கியின் ஒரு பாடல்வரி நினைவிற்கு வருகிறது- “மீன தூக்கி ரெக்க வரஞ்ச..வானம் மேல வீசி எறிஞ்ச..பறக்க பழக்குறீயே” ). முதன்முறை விமானத்தின் இறக்கையை அருகில் பார்த்தபோது, ‘என்ன இது, உடஞ்ச மாதிரி லூசா எடுத்துட்டு இருக்கே’ என்று எனக்குள் சற்று பதற்றம் கொண்டேன். ஆனால், பறக்கும்போது, மேகங்களையும், ஆகாயத்தையும் பார்க்கும் மகிழ்வுக்கு நிகரானது, அந்த இறக்கை காற்றின் விசையை கிழித்து அடக்கி முன்னகர்வதை காண்பது. 


விமானத்தில் இருக்கும்போது, என் விமானம் மட்டுமே ஆகாயத்தில் இருப்பதாய் எண்ணம். இப்போதும் கூட அப்படித்தான். அந்த மாயையில் இருக்கும்போது எதார்த்தமாய் ஒரு விமானம் என் எதிரில் கடந்து போகும். அதை உணரும்போதுதான், நாம் பறக்கும் அந்த வெளியில், அதே நேரத்தில் எத்தனை ஆயிரம் விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை எட்டும். எட்டியதும், நான் கண்ட பட்டு சரிகை போல், வான் வெளி சாலையில் மின்மினிகளாய் தொடரும் விமானங்களை, எனக்கு பல அடுக்குகள் மேலேயிருந்து காணும் என் சந்ததியினரை, ஜன்னல் வழியே கண்டுக்கொண்டிருப்பேன்.


ஜன்னலை சொன்னதும், விமானத்தின் அழகு சன்னலில் மனம் நிலைக்கிறது. அதற்கு திருஷ்டி வைத்தாற்போல் என்ன ஒரு பொட்டு அல்லது அது ஓட்டையா என்று மனதில் எண்ணம். அது ஏதும் ஆணியா? அல்லது ஸூக்ரூவா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பின் அதைப்பற்றி படித்தபோதுதான், மூன்றடுக்கு கண்ணாடிகளால் செய்யப்பட்டது விமான ஜன்னல்கள் என்பதும், அந்த துவாரம், உள்-வெளி காற்றழுத்தத்தை சமன் செய்வதற்காக என்பதும் தெரிய வந்தது.


இந்த முதல் நீண்ட தனி பயணம், அடுத்த வருடமே என் மேலாளரை, என்னை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்க வைத்தது. என் அப்பாவிற்கு ஒரு நம்பிக்கையை அளித்தது. மகள் தனியாய் எங்கு வேணாலும் சென்று இருந்து கொள்வாள் என்று. வீட்டிற்கு சொல்லாமல்தான் முதல் அமெரிக்க பயணத்தை ஒருங்கு செய்தேன். டிக்கட் ரத்து செய்ய முடியாது, பணம் திரும்பி கிடைக்காது என்று சொல்லித்தான், அவர்கள் மனதை தயார் செய்தேன். என்னை பயணம் அனுப்பி வைக்க யாரும் வரவில்லை. அது குறையென்றும் தோன்றவில்லை. 

வியாழன், 19 டிசம்பர், 2024

கடன் - ரம்யா மனோகரன்

ஜங்ஷனில் இருந்து வந்த பஸ், மேம்பாலத்திலிருந்து சரிவில் வேகமாய் இறங்கி,சடன் பிரேக் அடித்து, தேவி டாக்கீஸ் நிறுத்தத்தில் நின்றது. பயணிகள் ஏறி, இறங்கியபடி இருந்தார்கள். மஞ்சள் காப்பு கட்டிய கைகள், சித்திரை மாதத்தை நினைவுப்படுத்தின.


‘இழவெடுத்த பயக, பஸ் படிய கொஞ்சம் இறக்கமா வைச்சா, என்ன கொள்ளையில போகுமோ இந்த பயலுவளுக்கு’ என்று முனகிக்கொண்டே அந்த பாட்டி, பஸ்ஸின் இடதுப்புற சாய்வு பிடிமானத்தை பிடித்துக்கொண்டு இறங்குவதற்குள், வீர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கண்டக்டர் கொடுத்த விசிலுக்கு பிரேக்கிலிருந்து திடுமென‌ காலை எடுத்த டிரைவர், பஸ்ஸில் இருந்தவர்கள் கொடுத்த சத்தத்தில், மீண்டும் பிரேக்கை பிடித்தான். 


சர்ரென்று ஒரு அடி நகர்ந்து நின்ற அதிர்ச்சியில் ஒரு கால் அந்தரத்தில் தொங்க, பாட்டி கடைசி படியில் அப்படியே உக்காந்துவிட்டது.


பாலு மெடிக்கல்ஸ் வாசலில், தனது வண்டிக்குள் வாங்கிய மாத்திரைகளை வைத்து மூடிய மாணிக்கம், தனது இடுப்பில் நிற்காத பேண்டினை ஏத்திவிட்டுக்கொண்டே, விருட்டென்று எட்டு வைத்து,தள்ளாடிய பாட்டியை கையை பிடித்து தாங்கி, 'பார்த்து பார்த்து மா' என்றார். 


பூ விழுந்த கண்கள் கலங்கியிருக்க‌, அவரை நோக்கி பாட்டி தனது ஒட்டிய வாய் விரித்து புன்னகைத்தாள். 


மாணிக்கம் பாட்டியை கைத்தாங்கலாய் பிடித்து, ஏறுக்குமாறாய் நிறுத்தி வைத்திருந்த வண்டிகளைத் தாண்டி, ஓரமாய் கொண்டு போய் விட்டுவிட்டு வண்டியை எடுக்க திரும்பினார்.


நல்லாருக்கீங்களா ஐயா! அம்மா, அண்ணே, அக்கா எல்லா நல்லாருக்காங்களா? என்ன ஐயா இந்த வெயில வந்திருக்கீங்க?


மாணிக்கம், தனது கண் சுருக்கி, முகத்தில் மென்முறுவலோடு, யாரென்று யோசித்தான்.


என்ன ஐயா என்ன தெரிலயா? ராதிகா யா.


இப்போது முறுவல் புன்னகையாய் மாற, 

ஹா, என்னப்பா நல்லாருக்கியா? அக்காங்களாம் நல்லாருக்காங்களா? அம்மா நல்லாருக்கா? சதீசு என்ன பண்றான்?


யெல்லா நல்லாருக்குதுங்க யா. அவன் மெட்ராஸ் வண்டிக்கு கிளீனரா போறான்யா. மோகென்னேதா சேத்து வுட்டுச்சி.


இவ்ளோ நேரம் அம்மா இங்கதான் இருந்துச்சு. இன்னிக்கு கடைசி பூவுல யா. ராத்திரி இங்கிருந்து நடந்து போறோம். அதான் வூட்டுல செத்த தலைய சாச்சுட்டு வரலானு போயிருக்கு. நா எதுத்தாப்புலதான்யா பூக்கட போட்டுருக்கேன். 


எதிரில், முத்துமாரியம்மன் கோவில் பக்கத்தில், சற்று அமுங்கியிருந்த தகர நாற்காலியில், கிழிப்பட்டிருந்த கொடைகட்டியிருக்க, கீழே நான்கைந்து டின்களை வைத்து, அது மேலே ஒரு பலகை போடப்பட்டிருந்தது. வளவளப்பான பேனரின் உட்புறம் மேல்புறமாய் அதன்மேல் விரிக்கப்பட்டிருந்தது.மல்லிகை பூ கட்டி, பந்துகளாய் சுருட்டி அதன்மேல்வைக்கப்பட்டிருப்பதும், பாதி கட்டியிருந்த பூச்சரம்கிடத்தப்பட்டவாரும், பூக்கள் ரெவ்வண்டாய் அல்லது மூணுநாலாய், அடுக்கியிருந்தது. அந்த அமுங்கிய சேரில், ஒரு குழந்தை வெறும் ஜட்டியுடன், ஒழுகிய மூக்கினை துடைத்தவாறு உட்கார்ந்துக் கொண்டு, மாணிக்கம் நிற்கும்திசையையே பார்த்துக் கொண்டிருந்தது.


ஐயா, வாங்கய்யா, ஒரு ஜூஸ் குடிப்போம் என்று சொல்லிக்கொண்டே, தன் வயிற்றின் இடதுப்புறம் சொருகியிருந்த கல்யாணி கவரிங் பர்ஸினை எடுத்தாள்.


இன்னொரு நாள் சாப்பிடலாம் பா. அவசரமா ஒரு வேலயா போறேன்.

அம்மாவா விசாரிச்சேனு சொல்லு, வரேன்.


ஐயா ஒரு நிம்சங்கய்யா...என்று கூறிக்கொண்டே, சட்டென்று ரோட்டினை கடந்து, தன் கடையிடத்திற்கு சென்று, ஒரு முழம் பூவை எடுத்துக்கொண்டு, பிள்ளையையும் தூக்கிக்கொண்டு, மீண்டும் மாணிக்கத்தின் அருகில் வந்தாள்.

ஸ்னேகா ஐயாவுக்கு வணக்கம் சொல்லு என்று ராதிகா சொல்ல, ஒழுகிய மூக்கினை மீண்டும் துடைத்தவாறே, ரெண்டுகையும் சேர்த்து குழந்தை கும்பிட்டது.


மாணிக்கம், மீண்டும் புன்முறுவலோடு, பாக்கெட்டிலிருந்து, பத்து ரூபாய் எடுத்து அந்த குழந்தையின் கையில் வைத்து, தோளில் தட்டிக்கொடுத்து புன்னகைத்தார்.


ஐயா, எதுங்குகய்யா..பரவாலங்கய்யா...

இல்ல இருக்கட்டும். பிஸ்கட் வாங்கிக்கொடு..

இந்தாங்கய்யா.. இந்த பூவ அம்மாக்கிட்ட கொடுங்கய்யா...


சட்டை பையிலிருந்து, காசு எடுக்க போன மாணிக்கத்திடம், வேண்டாம்யா... இத எடுத்துட்டு போங்க..

இல்ல இந்தா..திருவிழா சமயம், பூ கிராக்கி வேற.

இல்லயா இது அம்மாக்கு நான் தர்றது..அம்மாவ கேட்டதாசொல்லுங்கய்யா.

சரிப்பா. அந்த பக்கட்டு வந்தா,வீட்டுக்கு வா. பிள்ளைய கூட்டிக்கிட்டு வா.

சரிங்கய்யா, என்று புன்னகைத்தாள்.


ம்மா... ம்மா....

யே...யே...இறங்குடா விழுந்துடாத. கேட்ட தொறந்து வாடா...

மாரி, இங்க பாரு உன் தம்பி தங்கச்சி வந்திருக்காங்க...

இந்தா வாரே க்கா..

 

“யே....சதீசு...இங்க யேண்டா அத தூக்கிட்டு வந்த? அம்மா , ஐயரம்மா வூட்டுக்கு போயிருக்கு டா. 

அங்க போடா” என்று கொள்ளைப்புறத்திலிருந்தவாறே கத்தினாள் மாரி.


இந்தா குட்டி அங்க இருந்துக்குட்டு கத்தாத. கிட்ட போயிட்டுசொல்லிட்டு வா என்று கட்டிலிலிருந்து ஒரு அதட்டல் விழ, கிடுகிடுவென ஓடி வந்த மாரி, கட்டிலை கடந்தபோது, 'சரிங்கபாட்டி' என்று சொல்லிக்கொண்டே அவள் தம்பியை நோக்கி வேகமாய் நடந்து, கேட்டின் இந்தப்புறம் நின்றாள்.


போடா...இங்க இது அழுவும் டா...பாட்டி திட்டும் டா...


டேய் சதீஷ் இங்க வா, ராதிகா வா? இங்க தூக்கிட்டு வா என்றது ஒரு குரல். 


வாய் நிறைய சிரிப்போடு, கண்ணில் வெக்கத்தோடு, வெளிறிய முகத்தோடு, ஒட்டிய வயிறு தெரிய, பொத்தான்கள் பிஞ்சிருந்த அழுக்குப்படிந்த சட்டையை, தொப்புள் தெரியாது இழுத்து தன் இடக்கையில் பிடித்துக்கொண்டு, வலதுக்கையில் தனது தங்கச்சி ராதிகாவை தூக்கி கொண்டு, கேட் கொண்டியை மூடமுடியாமல் மூடிவிட்டு வந்தான்.


தனது அண்ணன் கையில், ஒருபுறமாக கழுத்தை சாய்த்துக்கொண்டு, கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு, ஒருகண் பாதி மூடியிருக்க, இன்னொரு கண்ணில் ஒரு பயம் கலந்த கலவரத்தோடு, இருப்பினும், களையான முகத்தோடு, கேட்டில் இருந்து இருபது அடி தூரத்தில் இருக்கும் வீடுநோக்கி வந்தாள், ராதிகா.


பாத்திரங்கள் கழுவிய கைகளின் ஈரம் பிசுபிசுக்க, அந்த 9 வயது சிறுமி வேகமாக நடந்து உள்ளே சென்றாள்.


என்னடா ஸ்கூல்க்கு போவலயா?

இல்லயா என்று பல்லை காட்டினான்.

ஏய் இங்க வா, இறக்கி விடுடா..

போ பிள ஐயா கூப்பிடுறாருல...

அந்த பிள்ளை, தன் அண்ணனின் கைகளிலிருந்து இறங்கியது, அவசரமாக திரும்பி, அவன் பின்னே சென்று ஒளிந்துக்கொண்டது.


யே,,,இந்தா, போ பிள ஐயா கூப்பிடுறாருல..

இங்க வா.. ஒன்னும் பண்ணமாட்டேன்..வா.. என்றான் மாணிக்கம்.


அந்த பிள்ளை முதலிரு அடிகளை தயக்கமாய் எடுத்து வைத்தாலும், அடுத்த அடியை தைரியமாய் எடுத்து வைத்து வந்து நின்றது.

ஆச்சரியமும், குரூர சிரிப்பும் தோன்ற, ராதிகாவின் இடதுகையை தனது இடது கைகளில் பிடித்துக்கொண்டே,

எங்க வந்த? ம்ம்...?எங்க வந்த? என்றான்.

ம்மா...ம்மா...

உங்க அம்மா இங்க இருக்குதுன்னு யாரு சொன்னா?

ம்மா...ம்மா....

ஆ...ம்ம்ம்ம்.....என்று குழந்தை சிணுங்கியது.

யே பிள்ள யே சும்மா இரு,...என்று அதட்டினான் சதீசு..

 

உங்கம்மா இன்னும் வரலா டா..

சாப்பிட்டுயா நீ?

இல்ல  என்பது போல் தலையாட்டி கீழே குனிந்தான்..

போ உள்ளர போ...

அம்மா இருப்பாங்க..போயி சாப்பிடு போ...

 

பளீரென்ற வெளிச்சத்தில் அவன் கண்கள் மின்ன, ராதிகாவை நடத்திக்கொண்டு, படியேறினான். அந்த ஒன்றரை வயது பிஞ்சு, தனது இடது கையை பிடித்து, தடவதெரியாமல், தடவியவாறே, தத்தக்க, பித்தக்க என்று உள்ளேசென்று, அடுப்படியில், கிரைண்டரில் மாவு வழித்துகொண்டிருந்த வீட்டு அம்மாளை பார்த்தவாறு, கவுனை வாயில் வைத்துக்கொண்டு நின்றது. சதீசு கொள்ளப்புறம், மாரியை நோக்கி ஓடிவிட்டான்.

 

மாவு வழிப்பதற்காகவே பிறவி எடுத்து வந்திருப்பதாய்,  கண்ணும் கருத்துமாய் வழித்துக்கொண்டிருக்கையில், கதவோரத்தில் நிழலாடுவதை கண்டும், எந்த அதிர்வும் காட்டாமல், அவளை பார்த்தாள் வீட்டம்மா. 

தலை சொரிந்துக் கொண்டே கதவோரமாய் நின்றாள், ராதிகா.

 

போ, போயிட்டு தட்ட எடுத்துட்டு வா என்று சொன்னதுதான் தாமதம், குடு குடுவென்று ஓடிப்போய், பின்னால் கவிழ்த்து வைத்திருந்த தட்டை இரண்டு கைகளிலும் பிடித்துதூக்கிக்கொண்டு , கண்ணில் தேங்கிய நீரோடு வந்து நின்றது.

 

தொண்டையை கணைத்துக் கொண்டு, கைலியை அவிழ்த்து இறுக்கமாய் கட்டி, பின், தன் தொப்பை, கட்டிய இறுக்கத்தில் நோகாமல் இருக்க, மீண்டும் கைலியை அதற்கு கீழே தளர்த்தி விட்டுக்கொண்டே, அடுப்படி வாசலிற்கு வந்தான் மாணிக்கம். தட்டுடன் நின்றுகொண்டிருந்த ராதிகாவின் தலையில் ஓங்கி குட்டினான். ‘மடார்’ என்ற அந்த சத்தம், கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தும், தெளிவாய் கேட்டது.

 

சும்மா இருங்க..அடிக்காதீங்க...

ஏதும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது..

மாவு வழித்தக் கையோடு நின்றுக் கொண்டு, சத்தம் வராது,  அதட்டலாய் மனைவி சொல்ல, அவளை கோணப்பார்வை பார்த்துக்கொண்டு குறும்பாய் சிரித்தான், மாணிக்கம்.


தட்டை கீழே வைத்துவிட்டு தலையில் கை வைத்து தேய்த்துகொள்ளும் ராதிகாவை பார்த்து, வலிக்குதா?  “போ, அம்மாட்ட சோறு வாங்கிக்க போ...” என்று மாணிக்கம், குழுந்தையின் கன்னத்தை கிள்ளினான். 


“ஆமா, போங்க நீங்க” 

அட ஒன்னுமில்ல பிள..

என்னமோ இந்த பிள்ளய பாத்தா அடிக்க தோணுது..

எவ்ளோ அடிச்சாலும், அழுத்தமா இருக்கு பாரேன்.. அழுகவே மாட்டேங்குது..


பாவங்க...இதுலாம் பாவம் ஆமா...போங்க சும்மா...என்று புருவம் முடிச்சு விழ, கம்மிய தொண்டையில் சொல்லிவிட்டு, கை கழுவினாள் வீட்டுக்காரம்மா.


ராதிகா, இங்க வாப்பா..என்று கூறி, தட்டில் மதியம் வடிச்ச சோற்றினை போட்டு, குழம்பை ஊற்றினாள்.


போ போய் உக்காந்து, சாப்பிடு..

ஐயா சும்மா உங்கிட்ட விளையாடுறாங்க...

சோற்றை பார்த்து பிள்ளை சிரித்துக்கொண்டே, பின்கட்டுக்கு நடந்து போனது.


பாத்திரம் விளக்கி கொண்டிருந்த மாரியிடம், நீட்ட, மாரி கையை கழுவிவிட்டு, தட்டை வாங்கி கீழே வைத்துவிட்டு, சதீசு என்று கத்தினாள். கொள்ளைப்புற வாசலில், தோட்டத்தில் விழுந்திருந்த சப்போட்டா பழம் ஒன்றை உரித்து வாயில் போட்டவாறே சதீசு வந்தான். அருகில் சோற்றை பார்த்தவாறு பிள்ளை உக்காந்து, தனது கையில் சோற்றுப்பருக்கையை எடுத்தது.


ரிக்ஷா மணி ஒலித்தது..

புள்ள வந்துட்டான்... என் தங்கமகன் வந்துட்டான்.. என்று வேவகமாய் முன்வாசலுக்கு நடந்தான் மாணிக்கம்.

ரவி..பாத்து புள்ளைய இறக்குடா..மெதுவா...

சரிங்கய்யா...

பச்சை டவுசரும்,  வெள்ளை சட்டையுடனும், தனது மகன், இறங்குவதை பார்த்ததுமே துணுக்குற்றான்.


என்ன டா புள்ள சோர்ந்து இருக்கான்..

என்னனு தெரிலங்கைய்யா...உடம்பு சுடுற மாறி இருக்குதுயா...

தொட்டு பாருங்க...

அம்மாகிட்ட சொல்லி மருந்து கொடுங்கய்யா.

ம்ம்...சரி நீ கொஞ்சம் இரு..

சவாரி இருக்கா..

இல்லங்கய்யா...

வண்டி இங்கயே இருக்கட்டும், இந்தா நீ போயிட்டு வடை, டீ ஏதும் சாப்பிட்டு வா...


சரிங்கய்யா என்று மடித்திருந்த கைலியை இறக்கிவிட்டு, கும்பிட்டு, ஐந்து ரூபாய் காசை வாங்கிக் கொண்டான்.


படியேறிய குழந்தை, அம்மாவை பார்த்ததும், சென்று, புடவையை பிடித்துக்கொள்ள, அம்மா சற்று கீழே குனிந்ததும், வயிற்றில் சாய்ந்துக்கொண்டான். 

என்னங்க ஜூரம் அடிக்குதே புள்ளைக்கு என்று கூற, மாணிக்கம், கையில் வைத்திருந்த புத்தகப்பையைவிருட்டென்று ஹாலின் ஓரமாய் வீசிவிட்டு, சேரில் உட்கார்ந்துக்கொண்டு, அருகில் புள்ளையை அழைத்து,

ப்பா...என்னப்பா பண்ணுது....என்று கேட்டான்.

கண்ணில் நீர் தேங்கியிருக்க, பிள்ளை ஒன்னும்மில்லப்பா என்று

அம்மாவை பார்த்தான்.

அம்மா, “என்னய்யா?” என்றவாறே அருகில் வந்தாள்..


பய சிறுக்கீக எவளாது கீழ ஏதும் தள்ளிவிட்டுறுச்சுங்களா, அடிகிடி பட்டுருக்கானு பாருப்பா என்றார் மாணிக்கத்தின் தாயார், தன் கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு, முந்தானையை சரி செய்தவாறே.


யாரும் கீழ தள்ளி விட்டுடாங்களா?

இல்லப்பா என்று தலை அசைத்தான் குழந்தை.

மிஸ் அடிச்சாங்களா...

......

சொல்லுப்பா மிஸ் அடிச்சாளா?

பையன் கண்ணிலிருந்து நீர் பெருகியவாறு, நோட்டு கரெக்சனுக்கு, நிக்குறப்ப, தெரியாம மிஸ் கால மிதிச்சிட்டேன்பா.. அதுக்கு மிஸ் மொரச்சி பாத்து, ஷூ கால்ல மிதிப்பியான்னு கன்னத்த கிள்ளி இழுத்துட்டே இருந்தாங்க பா..

தெரியாம மிதிச்சிட்டேன், சாரி மிஸ்‍-ன்னு சொன்னேன், கன்னத்துல அறஞ்சுட்டாங்கப்பா...என்று அழுதான்.

 

கண்டாரோலி மவ....

பச்ச புள்ளய எப்புடி அடிச்சுருக்கா பாரு. கன்னம் சிவந்து போயிருக்கே இப்புடி...

அந்த தேவுடியா முண்டைய என்னனு கேட்டுட்டு வா மாணிக்கம்.


சும்மா இருங்க அத்த... நீங்க வேற..ஏங்க, பேசாமஇருங்க...அதுலாம் ஒன்னும் வேணாம். மாத்திர கொடுத்து படுக்க வச்சா சரியாயிடும்..

எழுந்து, கைலியை அவுத்து மீண்டும் இருக்கமா கட்டிக்கொண்டே, எம் புள்ள மேல கைய வைப்பா..நா பாத்துட்டு சும்மா இருக்கணுமா..

‘படிப்பும் வேணா..மயிரும் வேணா. ரயில்வே கேட்டுட்ட ஸ்கூல் நடத்துரானுங்க..வவுத்துகில்லாத பயதான் புள்ளைய அங்க சேப்பான். எனக்கு சரியா இருக்காதுன்னு தெரியும். நீதான் அங்க சேக்க புடுங்கி எடுத்த. 


“பாலம் வந்து, ஸ்கூல இடிச்சு தள்ளப் போறானுங்க. அந்த சிறுக்கி வேல இல்லாம பிச்ச எடுக்கப்போறா பாரு. போயிட்டு அவள என்னன்னு கேட்டுட்டு, முதல TC வாங்கிட்டு வரேன்.”என்று கொதித்து போய் பிதற்றியவாறு, பேண்ட் சட்டை மாட்டிக்கொண்டு மாணிக்கம் வெளியில் வர, ரவி டீ குடித்து விட்டு சரியாக வந்து சேர்ந்தான்.


ரவி, ஸ்கூலுக்கு போவுணும்..புள்ளைய மிஸ் ஒருத்திஅடிச்சிட்டாளாம்.

அதான்யா அப்பதே நினைச்சேங்க...என்னடா புள்ள சோர்வா இருக்குதுங்களேனு. ஏறுங்கய்யா...பெரிய வகுப்புலாம் வுடுறதுக்குள்ள அந்த பொம்பளய புடிச்சிடுவோம்.


ரிக்ஷாவில், கோவத்துடன் ஏறி உட்கார்ந்த மாணிக்கம், வாயில் கவுனை வைத்தவாறு கேட்டருகில் நின்ற ராதிகாவை பார்த்தான். வண்டி நகர்ந்தது.



காலிங் பெல் அழுத்த, கதவை திறந்த மனைவியிடம், பூவை நீட்டினார் மாணிக்கம்.

என்னங்க அதான் சாயுங்காலம் பாட்டி கொண்டு வருமே..

வரவழியில நம்ம ஜெயா மவ, ராதிகா  பாத்துச்சு..அம்மாவுக்கு கொடுங்கைய்யான்னு கொடுத்துச்சி..

“ஜூஸ் குடிச்சிட்டு போவோம் வாங்கைய்யான்னு கூப்பிடுது புள” என்று புன்னகைக்க, அவர் மனைவியும் புன்னகையோடு பூவை வாங்கிக்கொண்டாள்.


“இப்போ அதுக்கு இருபத்தைஞ்சு வயசு இருக்கும்ல” 

“ஆமா...ஆமா.. அதுக்கே ரெண்டு வயசுல மவ இருக்கு”. ஆயி மா(தி)ரியே மவளுக்கும் கண்ணு.  

நம்ம தம்பி, பாப்பவலாம் விசாரிச்சுது.

மவள கூட்டிக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லிருக்கேன்.


*