வெள்ளி, 10 ஜனவரி, 2025

தூவானம் [ ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ் சிறுகதை - அஜிதன் ]


ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரையும், படங்களையும் கண்டவுடனே யாரைப்பற்றி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. அவரை பற்றிதான் கதை. அதை எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்ற உற்சாகத்தில்தான் வாசிப்பை ஆரம்பித்தேன்.

அந்த சிறுவனின் வாழ்க்கையை கரிசல் மண்ணில் விரித்தெடுத்ததும், அவன் பின்னே சென்று கொண்டிருந்தேன். அவன்தானோ ‘அவர்’ என்ற எண்ணம் முதலில். பின் அவரை பற்றியே இல்லையோ என்றும், இல்லையில்லை அவர்தான் என்றும் மனதில் சடுகுடு விளையாட்டு. முதல் பாகத்தை முடிக்கும்போது ‘நான் அவர் குரலை கேட்டேன்’ என்றதும், மனதில் ஊர்ஜிதமாகி ஒரு சபாஷ் போட்டேன். என்ன அழகான கோணத்தில் ஒரு கதை!


என்னைச் சுற்றி எல்லா திசைகளும் ஒரேபோல அந்நியமாகத் தெரிந்தன. எப்போதும் திறந்து கிடக்கும் பாதை என்பது அது ஒன்றுதான். உடல் பற்றி எரிபவன் ஒரு சிறு துளி நீரை தேடி அலைவதைப்போல நான் திரிந்தேன். அப்படி ஒரு நாளில், கரிசல் மண் உருகி தகிக்கும் கோடை மதியத்தில், நான் அவர் குரலை கேட்டேன்”.


“அவர் வருகை ஓர் அலை போல தமிழ்நாட்டில் நிகழ்ந்தது”- இக்கதை என்னுள் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் இது நெருக்கமாய் தோன்றுகிறது? கதையின் பின்னல். கதை சொல்லியின் பின்னணியும், சூழலும், அவனின் உளவியலும் அந்த பின்னலின் வலுவான கண்ணிகள்.


“முகம் தெரியாத இருளில் அவன் குரல் தீமையின் அடியாழங்களுக்குள் சென்று வருவதைத்திகைப்புடனும் குறுகுறுப்புடனும் கேட்டிருக்கிறேன்பகலில்கூட அவன் கண்களை நான் அதிக நேரம்பார்க்க துணியவில்லை”.


“…….எங்காவது தொலைவாக ஓடிச்செல்வதை பற்றிச் சிந்திக்க துவங்கினேன்எங்குச் செல்வதுஎன்று எனக்கு எந்த வழியும் தெரியவில்லை


எல்லாவற்றையும் மனிதனிடமிருந்து பறித்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் பறிக்க முடியாது—எந்த சூழலிலும் தனது மனப்போக்கைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை.” என்கிறார் விக்டர் பிராங்கில். (From Man’s Search for meaning - Viktor Frankl).


இந்த கதை சொல்லியின் எண்ணவோட்டம் விக்டரின் கூற்றை ஒத்திருப்பதாய் தோன்றியது. எழுத்தாளர், வாசகர்முன் இரு வேறு மனப்போக்கு உடையவர்களை அருகருகே நிறுத்தி காட்டியதும், அங்கிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து தன் பாய்ச்சலை நிகழ்த்தியதும் அபாரம். அந்த தேர்வும் முக்கியமானதாகிறது.


(கதை சொல்லி) அவனே அறிந்திராத அவன் மனதின் ரசனை அல்லது அந்நேரத்தின் தேவை, உளவியல் ரீதியில் அவனை பாதித்ததுமாகவும், மீட்டெடுத்ததுமாகவும் அமைத்திருப்பதே கதையின் வலுவாய் நான் பார்க்கிறேன். 


அந்த கதை சொல்லி, தன் ஊர் அருகே சேர்ந்த ஒருவரை, சிறுவயதில் தன் பாட்டனுடன் சென்று பார்த்து, கேட்டு மனதில் பதிந்து போன அந்த பிம்பத்தை, பின்னாளில் தன் மீட்பராய் கருதுகிறான். இனி எதற்காக அவன் வாழ்க்கை என்பதில் ஒரு இலக்கு கொள்கிறான். 


என் வாழ்நாளில் முதல் முதலாக மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் அன்று உணர்ந்தேன்அதன் சாயலை.

அது என் மகிழ்ச்சி அல்லஅது ஒரு பொருட்டே அல்லஅந்த குரலின் மகிழ்ச்சி அதுஅதற்காகவேநான் உயிரோடிருக்க வேண்டும்அதன் இன்பத்தைக் காணஅதன் எல்லா நிறைவையும் காணஇந்தபிரபஞ்சமே எனக்கு மீண்டும் கிடைத்தது போலிருந்ததுஅன்று நான் அதை உணர்ந்தேன்தனக்காகமட்டும் வாழும் எந்த வாழ்க்கையும் காலடி மண்ணுக்குள் செரித்து அடங்கிவிடும்”


ஆடிமாதச் சாரல், கதை சொல்லியின் ஊர் நுழையும் விதத்தை சொல்லியிருக்கும் அந்த ஒரு பத்தியே, ஒரு சோறு பதம். அவன் கேட்ட குரலினை அச்சாரலோடு ஒப்பிட்டது, அழகான முதல்நிலை வெளிப்பாடு.


‘தம்தன தம்தன’ பாடல் உருவான தருணத்தில், இசைஞானி தன் நண்பர்கள் வட்டத்தில் உரையாடி கொண்டதாய் ஒரு பேச்சு அடிக்கடி உலாவும் எங்கள் நண்பர் வட்டத்தில்.


பாடல்கள், அவர் மனதில் உருவாகி வரும். அந்த அருவத்தின் பிரம்மாண்டம், வரிகள் கொடுத்தபின் சற்று குறையும், அதற்கு குரல் கொடுத்தபின் மேலும் குறையும், அது முழுவடிவம் எடுத்து வெளிவந்த பின், தன் மனதில் இருந்து எங்கோ நெடுந்தூரத்தில் நிற்கும் என்பாராம். அருவம் உருவம் பெற்றபின் எவ்வாறு உருக்குலைகிறது என்று அவர் கூறுவது, பிரம்மத்திற்கும் பிறப்பிற்குமான இடைவெளியை காட்டுவதோ என்று தோன்றும்.


இசைஞானியின் தாக்கமின்றி அனேகமாக மக்கள் இருப்பது அரிது. அந்த தாக்கத்தை மொழிப்பெயர்க்கவியலாத தளத்திலேயே இன்றும் பெரும்பாலானோர் இருப்பார்கள். பல பேர்களை வலைத்தளங்களில் கண்டிருப்போம். பெரும்பாலும் தலையை ‘இல்லை’ என்ற பொருளில் ஆட்டி, அவர்கள் உள்ளே கசிந்து கொண்டிருக்கும் உயிரின் வலியை விவரிக்க முற்படுவார்கள். நாங்கள் எங்கள் நண்பர் வட்டத்தில் பேசுகையிலும், ‘இந்த மனுசன வச்சுகிட்டு என்னத்த பண்ண போ’ என்றளவில்தான் எங்களின் வெளிப்பாட்டு இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறோம். நான் பல நேரங்களில் என் கண்ணீர் வழியே மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறேன். இருந்து வருகிறேன். பல பாடல்களை கேட்பதையே தவிர்த்து வருகிறேன். அதன் கனத்தில் என் உள்ளத்தை தாங்கி பிடிக்க இயலாததே காரணம். ஜெ-யின் தீவர வாசகர் ஒருவர், அவருக்காய் சங்கருத்து கொள்வேன் என்று தன் தீவிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறு பலவிதமான வெளிப்பாடுகள், தங்களை பாதித்த ஒருவரை நோக்கி. ஆனால் அவ்வாறு சொல்லி முடித்தும் தூவானமாய் நெஞ்சில் மிஞ்சி கிடக்கும், எடுத்து கோர்க்கவியலாத சொற்களாய் உணர்வுகள்.


அஜிதன் (மனதில் அஜி என்றே வாஞ்சையோடு சொல்லிக் கொள்கிறேன்) அந்த முதல்நிலை வெளிப்பாட்டிற்கு பின் அப்படி உணர்ந்திருப்பாரா? முழுதும் எழுதி முடித்தும் அப்படி உணர்ந்திருப்பாரா? இசைஞானியின் ரசிகராய் நான் நின்று பார்க்கையில், அப்படித்தான் உணர்ந்திருக்க முடியும் என்றே எண்ணிக் கொள்கிறேன். இன்னொன்றும் தோன்றுகிறது. இதுவரை இசைஞானியின்பால் பெருக்கெடுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதங்களில், அஜிதனின் வெளிப்பாடு, காலங்கள் கடந்தும் நிற்கும். இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து வரும் ரசிகன், இலக்கிய உலகு தெரியாதிருப்பவனாய் இருந்தாலும், இசைஞானியை தெரிந்திருந்தால்,அஜிதனை அவன் தவிர்க்கவியலாது.


மருபூமி நூல் விழாவில், அஜிதன் சிறிது காலம் திரைப்படங்களில் கவனம் செலுத்த போவதென்று முடிவெடுத்திருப்பதை கூறி, அதற்கு பாவண்ணன் அவர்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. எனக்கு அன்று அவர் கருத்து சரி என்று தோன்றியது. 


இப்போது அதை நினைக்கையில் தோன்றுவது, ஒரு இலக்கியவாதி எங்கு, எதிலிருந்தாலும் அவன் இலக்கியவாதியே. அவனுக்குள் இருக்கும் படைப்பாளி வெவ்வேறு வடிவங்களில் உருப்பெறுகிறான் என்பதே பொருள். ஆகையால் இன்று எனக்கு, அஜிதனின் திரைமொழியை காண ஆவல் பெருகுகிறது.


இன்னும்கூட தோன்றுவது, இசைஞானியின் வாழ்க்கை திரைப்படமாய் (Biopic) உருவாகி வரும் நிலையில், அஜிதனின் பங்கு அதில் இடம்பெறுவதாயின், அது வரலாற்று பதிவு என்பதை தாண்டி, ஒரு நூற்றாண்டின் நிகழ்வாய் என்றென்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது. குறைந்தபட்சமாய் இக்கதையை வாசித்தால்கூட அந்த ரசனை தீவிரத்தின் ஒரு பொறி தீண்டப்பெற்று அப்படம் வாழ்த்தப்பெற்றதாகும். 


இக்கதையின் உச்சம் அந்த ஒரு வரி. அதுவே ஒட்டுமொத்தத்தின் தொடக்கம் எனவும் கருதுகிறேன். அவ்வரியை நான் சொல்லப்போவதில்லை. அதை சொல்லாமல் இக்கதை பற்றி பேசி முடிய போவதில்லை. அதை சொன்னாலும் முடிய போவதில்லை. 


அந்த உச்சம், எச்சமாய் தொடர்ந்து கொண்டே இருப்பது. 

அது ‘இருவருக்கும்’ இடையில் இருந்து கொண்டே இருப்பது!

எந்த இருவருக்கும் இடையிலும் இருந்து கொண்டே இருப்பது!

‘எந்த’ இருவருக்கும் ‘இடையில்’ இருந்து கொண்டே இருப்பது?

இரு உருவத்திற்கும் இடையில், அருவமாய்! 

நெடுந்தூரத்தில் அல்லாமல், மனதிற்கு நெருக்கமாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.