புதன், 31 ஜூலை, 2024

மூன்றாம் பிறை - மம்முட்டி, கே.வி.ஷைலஜா

தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை வாஞ்சையோடு நினைவு கூர்ந்திருக்கும் விதம், மலைமீது நடக்குபோது சினேகத்தோடு ஸ்பரிசிக்கும் மழைத்துளிகளை ஒத்தது.

சிறிய எளிய புத்தகம். நல்ல மொழிப்பெயர்ப்புடனும் ஒருசில எழுத்துப்பிழைகளுடனும் காணப்படுகிறது. 20 தலைப்புகளில் அளித்திருக்கும் அனுபவமும், தகவல்களும் நன்றாக இருந்தன. அவரின் முதல் ரசிகனை நினைவுக்கூர்ந்த விதமாக இருக்கட்டும், நள்ளிரவில் அவர் உதவி செய்து சம்பாதித்த பணமாக இருக்கட்டும், நண்பனை சந்திக்கும் இடமாக இருக்கட்டும், அனைத்துமே திரைக்கதை காட்சிகள் போல அல்லது Slow motion-ல் காட்டப்படும் Montage சாங் போலவும் கண்ணில் உலவுகின்றன.


அவர் மதத்தில் கூறியிருக்கும் ரமலான் பண்டிகை ஒட்டிய நாட்களில் கொண்டாடப்படும் விழாவும் என் மதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவும் ஒத்துப்போவது ஆச்சரியமாயிருந்தது. உடனே  மனதில் தோன்றியது ஆசிரியர் ஜெ கூறும் வரி - ‘ஆச்சர்யம் என்பது அறியாமையின் ஒரு வெளிப்பாடு’.அதை ஒட்டிய தகவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. 

பறவை பார்த்தல்

அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்

தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்

கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது

தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;

பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள

வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;

சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை

ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;

அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தால்

கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;

உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும், 

பின் இழுத்தும், 

அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள் 

அது செல்லும் திசை நோக்கி;

பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து, 

தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்; 

கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;


ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய் 

தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;


அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு;


நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..

அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்

நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..


அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.

செவ்வாய், 30 ஜூலை, 2024

அப்பா

அள்ளி எடுத்தாய்

அவள் அன்னை ஆனாள்

அள்ளி எடுத்தாய் 

என் தந்தை ஆனாய்

அள்ளி கொடுத்தாய்

எவர் தந்தையும் ஆனாய்

இன்று தள்ளி நின்று

எங்கள் காவலன் ஆனாய்!

ஞாயிறு, 28 ஜூலை, 2024

தம்பி

அப்பா…

அவன்

ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு நொடியும்

கண் நிறைந்து, 

மனம் நிறைந்து, 

எங்கும் எதிலும் 

நீக்கமற நிறைந்து, 

இந்த 

அர்த்தமற்ற வாழ்வினை கடக்க 

என் கைப்பிடித்து 

வழி செய்கிறான். 

ஆம், அவன் இயற்கையோடு கலந்துவிட்டான் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்..


என் தலை நிமிர்ந்தால் வானமாய்..

என்னை தாங்கிப்பிடிக்கும் நிலமாய்..

என் சுவாசக் காற்றாய்..

என் உயிர் இன்னும்

உடலுடன் ஒட்டியிருக்கிறது

என்று நான் உணர

என் இரத்த ஓட்டமாய் 

உடற்சூடாய்-நெருப்பாய்..


என் கண் ‘நீராய்’..

அவன்!

அவன் மட்டுமே

இயற்கையாய்

என்னை ஆட்கொள்கிறான்.


நான் என்னை

ஆசுவாசப்படுத்திக்கொள்ள

அனுதினமும் ஆயத்தமாகிறேன்..

இயற்கையாய் அவனை

பற்றிக்கொண்டு

இப்பயணத்தை தொடர்வதற்கு..


இப்பயணத்திற்கு முடிவுண்டு

அம்முடிவிலே நமக்கு நிறைவுண்டு

பாசத்திற்கு முடிவில்லை


என் வாழ்க்கை படத்தின்

இடைவேளையில் நான் மட்டும்.

இறுதியில்

அவன் வருவான்

தேர்க்கொண்டு

என்னை வான் ஏற்ற!!!


எவ்வாறு என் கழுத்தில்

நாண் ஏற 

காத்திருந்தானோ,

அவ்வாறு

காத்திருப்பான்

எனக்காக!!

தரிசனம்

விடியலில் எழுந்து 

அமர்ந்திருக்கிறேன்

என்முன் 

விரிசலுற்ற கண்ணாடி

விரிசலின் மத்தியில் 

என் கண்கள் சிக்கிக்கொண்டன

கண்முன் கண்டேன் 

என் மூதாதையரின் தரிசனம்!

சனி, 27 ஜூலை, 2024

காட்சி

இளஞ் செந்நிறத் தீற்றல்

பின் மாலை வானில்

முயல் ஒன்றின் வாயில்;

எங்கோ இருந்த

அந்த பறவைக்கு தெரிந்திருக்கிறது,

அதன் சிறகுகள் அதற்கு சாமரமாய்

சாவதானமாய் தங்கள் வருகையை

அறிவித்தவாறே இருவரையும் நோக்கி

பயணிக்கிறது;

முயல் ஒரு ஓரப்பார்வையை

தந்துவிட்டு திரும்புகிறது!

வெள்ளி, 26 ஜூலை, 2024

வீடு

பிறை தெளிந்த வானத்தில் 

நால்புறத்தில் இருந்தும்

பறவைகள் ஒலி எழுப்பிய வண்ணம்

அங்கும் இங்கும் பறந்து கொண்டே

இருக்கின்றன..

கூடடையும் நேரம்..

கூட பிறந்தவர்களையும்

கூட வாழ்பவர்களையும்

பெற்றவர்களையும் தேடுகின்றன

அறிவிப்பு செய்கின்றன

நடுத்தெருவில் நின்று அண்ணாந்து

பார்த்து கொண்டிருக்கிறேன்

அங்கே என் வீடு

யாருமற்று பூட்டிக்கிடக்கிறது!

புதன், 24 ஜூலை, 2024

அதற்கு பதிலாக

பின்னங்காலின் காயத்தை

நாவால் நக்கி நனைத்து

தலை தாழ்த்தி பார்த்து

கண் சொருகி சுகம் காண்கிறது

எதிர்வீட்டு வாசற்கல்லில்

படுத்திருக்கும் கருப்பி.

எழுத்தில் உருக்கிய வலியை

நான் வாசித்து கொண்டிருக்கிறேன்

வாசிக்க வாசிக்க

வலியை தேடுகிறேன்

வரிகளே வழி மறிக்கிறது

கருப்பி என்னை கண்டு எழுந்தது!

மனம்

அந்த உயிர் இன்னும் இருக்கிறது

தூங்கியபடியே விழித்திருக்கிறது

ஒரு கணம், 

இதோடு முடிவதல்ல இதன் பயணம்

என்று நெஞ்சு தெம்புறுகிறது..

முடிந்தாலும் அது விடுதலையே

என்று தத்துவ விசாரம் பழகுகிறது

அடுத்த நொடி செயலை நோக்கி

எட்டுவைக்கிறது மனம்

எங்கோ ஒலிக்கிறது அவ்வரிகள்

வரிகளில் எழுந்து வருகிறது

ஒரு பிரம்மாண்ட கடந்த காலம்

மண்ணின் வயிற்றுக்குள் அமிழும்

பல மாடி கட்டிடமாய்

குலைந்து குருணையாகிறது

மனம்!

திங்கள், 22 ஜூலை, 2024

இயல்பு

இந்த கட்டிட வளாகத்தில்

சுற்றி சுற்றி வருகிறேன் 

மின்தூக்கி மேலையும் கீழேயும்

ஏறி இறங்குகிறது வெகு மெதுவாக;

நோயுற்ற உடல்

முடியாமல் இழுத்து இழுத்து

மூச்சு விட்டு

உயிரை பிடித்து வைத்துக்கொள்ள

பிரயாசைப்படுகிறது

அதைப்பற்றி எல்லாம்

அதற்கென்ன தெரியும்

அது ஏறி இறங்குகிறது

வெகு மெதுவாக!

ஞாயிறு, 21 ஜூலை, 2024

காத்திருப்பு

நஞ்சு நாக்கு 

நக்கும்

மானுட நொய்மை

கந்தலுற்ற உடம்பு

காய்ந்த மனது

நோயின் நெடி

காலத்தின் கணக்கு

அகாலத்தில்…