புதன், 31 ஜூலை, 2024

பறவை பார்த்தல்

அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்

தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்

கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது

தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;

பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள

வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;

சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை

ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;

அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தால்

கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;

உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும், 

பின் இழுத்தும், 

அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள் 

அது செல்லும் திசை நோக்கி;

பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து, 

தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்; 

கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;


ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய் 

தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;


அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு;


நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..

அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்

நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..


அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.