அவள் நடுத்தர வயதை நெருங்குபவள்
தினமும் மாடியில் நடை மேற்கொள்கிறாள்
கம்பி கதவை திறந்து மொட்டை மாடி வரும்போது
தனது வலப்பக்கம் சூரியனை கண்டு கை அசைக்கிறாள்;
பின்பு அந்த மொட்டை மாடி நடுவில் உள்ள
வீட்டு விமானத்தை பிரகாரத்தில் சுற்றி சுற்றி வருகிறாள்;
சூரிய வெளிச்சம் கூசினாலும் ஆகாயத்தை
ரசிப்பதை அவள் நிறுத்துவதில்லை;
அந்த சமயத்தில் வானில் விமானம் பார்த்தால்
கருநீல முகத்தில் நிலாவின் சாயல்;
உற்சாகத்தில் உடனடியாய் உயர்த்தியும்,
பின் இழுத்தும்,
அக்கம் பக்கம் சுற்றி பார்த்து மீண்டும் உயர்த்தியும் கை அசைக்கிறாள்
அது செல்லும் திசை நோக்கி;
பின்பு வானில் நீள அகலத்தில் காற்றில் கோடு கிழித்து,
தனக்குள்ளே திசையை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்;
கீழே குனிந்து உள்ளூற உவகை கொள்கிறாள்;
ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய்
தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;
அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு;
நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..
அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்
நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..
அவள் திரும்புகையில் நான் மெளனமாய் அவள் பார்க்குமாறு பறந்து எதிர்திசைக்கு செல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.